படிக்க சொன்ன தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்.. நெல்லையில் அதிர்ச்சி!
Tirunelveli Murder : திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என தந்தை அறிவுறுத்தியதால், ஆத்திரத்தில் மகன் அவரை கொலை செய்துள்ளார். இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மாரியப்பன் மீது, 19 வயதான தங்க பாண்டியன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி, ஜூன் 25 : திருநெல்வேலியில் கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுறுத்திய தந்தையை, மகன் கொலை (Tirunelveli Murder) செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், தந்தை தட்டிக் கேட்டதை அடுத்து, 19 வயதான இளைஞர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (44). இவரது மகன் தங்க பாண்டி (19). மாரியப்பன் கூலி வேலை செய்து வந்தார். அவரது மகன் தங்க பாண்டியனை அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்த்துள்ளார். அதிக பணத்தை செலவழித்து அவர் தனியார் கல்லூரியில் சேர்த்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக தங்க பாண்டியன் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பலமுறை மாரியப்பன் அவரிடம் கூறியிருக்கிறார்.
தந்தையை கொன்ற மகன்
படிப்பின் முக்கியத்துவம் குறித்து தங்க பாண்டியனுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். படித்தால் தான் முன்னேற் முடியும் என அறிவுறுத்தி இருக்கிறார். இருப்பினும், மாரியப்பன் பேச்சு சற்றும் கேட்காத தங்க பாண்டியன் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
இதனால், தந்தை மகன் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், 2025 ஜூன் 24ஆம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் எழுந்த தங்க பாண்டியன், வீட்டிற்கு வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து தந்தை மாரியப்பனின் தலையில் போட்டுள்ளார்.




இதில், பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தார். இதனை அடுத்து, தங்க பாண்டியன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாரியப்பனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மேலப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தங்க பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
படிக்க சொன்னதால் ஆத்திரம்
அவரிடம் நடத்திய விசாரணையில் தந்தை மாரியப்பனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து, தங்க பாண்டியை போலீசார் சிறையில் அடைத்தனர். கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்திய தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீப காலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 2025 ஜூன் 24ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் காவலரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வஉசி மைதானத்தில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அங்கு குடும்பத்துடன் வந்திருந்த காவலர் அதனை தட்டிக் கேட்டிருக்கிறார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் காவலரை சரமாரியாக அரிவாளால் தாக்கி இருக்கிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.