திருப்பூரில் பயங்கரம்… இந்து முன்னணி பிரமுகர் கொடூர கொலை.. தீவிர விசாரணை!
Tirupur Hindu Munnani Functionary Murder : திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் பாலமுருகன் என தெரியவந்துள்ளது. இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவராக இருந்தார்.

திருப்பூர், ஜூன் 25 : திருப்பூர் மாவட்டத்தில் (Tirupur Murder) இந்து முன்னணி பிரமுகர் (Hindu Munnani Worker Murder) கொலை செய்ய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூன் 25ஆம் தேதியான இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் கொலை சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, சமீப காலங்களில் நடக்கும கொலை சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கொலை சம்பவங்களையும், ரவுடிகளில் அட்டூழியத்தை ஒழிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதனால், எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு இருப்பதாக குற்றச்சாட்டி வருகின்றனர். இப்படியான சூழலில், திருப்பூரில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.
இந்து முன்னணி பிரமுகர் கொடூர கொலை
அதாவது, திருப்பூர் மாவட்டம் குமாரானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவராக இருந்தார். இந்த நிலையில், 2025 ஜூன் 25ஆம் தேதியான இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டிற்கு அருகில் பாலமுருகனை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.
கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். நீண்ட நேரமாகியும் பாலமுருகன் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில், காவல் துறையினர் பாலமுருகனை தேடிய போது, அவர் வீட்டருகே வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனை அடுத்து, பாலமுருகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து, பாலமுருகன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர விசாரணை
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற திருப்பூர் மாநகர் காவல் வடக்கு துணை ஆணையர் பிரவீன் கவுதம், 3 தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதனால், போலீசார் கொலை செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகிறது.
அதோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக, 2025 ஜூன் 24ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் காவலரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வஉசி மைதானத்தில் தகராறில் ஈடுபட்டு இருந்ததால், அதனை தட்டிக் கேட்ட காவலரை 5 பேர் கொண்ட கும்பலை சரமாரியாக அரிவாளால் தாக்கி இருக்கிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.