சின்ன ஓட்டை இருந்தா போதும்… அசால்ட்டா உள்ளே போகும்.. கோவையில் அதிர்ச்சி தந்த சினேக் என்ட்ரி!
Snake Entered House Coimbatore : கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவு நீர் வெளியேறும் குழாய் வழியாக பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், கீரணத்தம் பகுதியில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளன. இதில், ஒரு குடியிருப்பு வீட்டின் வெளிப்புறத்தில் கழிவு நீர் மற்றும் மழைநீர் வெளியேறும் பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பைப்பின் முனையில் பாம்புகள், பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் உள்ளே செல்லாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் கப்பு மூடி போட்டு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த மூடியில் இருந்த மிக சிறிய அளவிலான துவாரத்தின் வழியே நஞ்சுள்ள பாம்பு ஒன்று தனது உடலை மெல்ல மெல்ல வளைத்து, மிக நெளிவாக பைப்பிற்குள் நுழைந்து சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் தற்செயலாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது.
சமூகவைலதளங்களில் வைரலாகும் வீடியோ
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அத்துடன், அந்த வீடியோவில் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையும் எடுத்துள்ளார். அதில், எங்களது வீட்டில் கழிவு நீர் வெளியேறும் குழாயின் முனையில் பாதுகாப்புக்காக தான் பிளாஸ்டிக் கப் மூடி போட்டு வைத்திருந்தோம். ஆனால், அதில் உள்ள சிறிய துவாரத்தின் வழியாக பாம்பு ஒன்று உள்ளே நுழைந்து சென்றுள்ளது.
கழிவு நீர் வெளியேறும் பைப்பில் மூடி
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் பைப்புகளின் முனைகளில் வெறும் கப்புகளை மட்டும் போடாமல், மிக நெருக்கமான கம்பி வலைகளை போட்டு நன்றாக மூடி வைக்க வேண்டும். இல்லையெனில், கழிவு நீர் வெளியேறும் பைப்புகள் வழியாக பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டின் சமையல் அறை மற்றும் கழிவறைகளுக்கு வந்து விடும் ஆபத்து உள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை- விழிப்புணர்வு
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதன் காரணமாக வனப்பகுதிகள் மற்றும் புதர்களில் இருந்து ஏராளமான பாம்புகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அதிக அளவில் வர தொடங்கி உள்ளன. தற்போது, கீரணத்தத்தில் பைப்பிற்குள் பாம்பு ஒன்று புகுந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் இடையே பெரும் விழிப்புணர்வையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.