‘ஆட்சியில் பங்கு’.. அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு என்ன? இபிஎஸ் பரபர பேச்சு!!
AIADMK alliance stance: ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வாக்கு வங்கி உண்டு. அதனடிப்படையில் தான் கூட்டணி அமைக்கப்படும். 2021 தேர்தலில் 2 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்திருப்போம். அதை இழந்த காரணத்தினால் எதிர்க்கட்சியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 12: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கான வெற்றியை மக்கள் முகத்தில் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு தேர்தலில் மாறுபட்ட மக்களின் தீர்ப்பைத்தான் பார்க்க முடிகிறது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், 2021 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தல் வேறு; மக்களவைத் தேர்தல் வேறு என்றார்.
இதையும் படிக்க : “ஆட்சியில் பங்கு”.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு
210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்:
அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையான கூட்டணியாக அமைந்திருக்கிறது. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. அதனால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. வருகிற தேர்தலில் சுமார் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. அதிமுகவில் இருந்தவர்கள் திமுகவில் கூட்டணியில் இருந்துள்ளனர். அதேபோல், அங்கு இருந்தவர்கள் இங்கு இருந்திருக்கின்றனர். கூட்டணியைப் பொறுத்துதான் வெற்றிவாய்ப்பு.
2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி:
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வாக்கு வங்கி உண்டு. அதனடிப்படையில் தான் கூட்டணி அமைக்கப்படும். 2021 தேர்தலில் 2 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்திருப்போம். அதை இழந்த காரணத்தினால் எதிர்க்கட்சியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு கட்சியும் , அந்த கட்சியை வலுப்படுத்த வேண்டும். அந்த கட்சியின் சார்பாக எம்எல்ஏக்கள் வரவேண்டும்.
என்டிஏ கூட்டணியை அதிமுகவே தலைமை தாங்கும்:
திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணிப் பிரச்னையில் தலையிட தார்மிகப் பொறுப்பு எங்களுக்கு இல்லை. இருதரப்பிலும் நீண்டகாலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. ஆட்சியில் பங்கு என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிமுக தலைமை தாங்கும். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அவர் தெளிபடுத்திவிட்டார்.
இதையும் படிக்க : கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!
அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்:
சில அரசியல் கட்சித் தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எங்கள் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்த குழப்பமும் இல்லை. அதிமுக பெருவாரியான இடங்களில் வெற்றிபெறும். அதிமுக பெருவாரிய இடங்களில் வெற்றிபெற்று தனித்தே ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்தார்.