செய்தியை கேட்டு 4 நாட்கள் தூக்கம் இல்ல… சசிகலா பரபரப்பு பேட்டி
செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா, திமுகவுடன் கூட்டணி என்பது கனவில்கூட அதிமுகவினருக்கு வரக்கூடாது. அது தவறான விஷயம். அதிமுக - திமுக கூட்டணி பேச்சு என்ற செய்தியை கேட்டு 4 நாட்கள் எனக்கு தூக்கமே வரவில்லை என்றார்.
சென்னை, மே 13 : தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என 2 அணிகளாக பிரிந்துள்ளன. இந்த நிலையில், சட்டமன்றத்தில் மே 13, 2026 அன்று நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து தவெக ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சி பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி அதிரடி காட்டினார்.
‘திமுகவுடன் கூட்டணி என்பது கனவில்கூட அதிமுகவினருக்கு வரக்கூடாது’
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் இன்று ஒற்றுமையில்லாமல் உள்ளது. அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒற்றுமை முக்கியம். அதையே நான் விரும்புகிறேன். அதிமுகவில் ஒற்றுமையை வலியுறுத்திதான் இத்தனை காலம் நான் பேசி வந்தேன். திமுகவுடன் கூட்டணி என்பது கனவில்கூட அதிமுகவினருக்கு வரக்கூடாது. அது தவறான விஷயம். அதிமுக – திமுக கூட்டணி பேச்சு என்ற செய்தியை கேட்டு 4 நாட்கள் எனக்கு தூக்கமே வரவில்லை.
இதையும் படிக்க : நீட் தேர்வை ரத்து செய்க – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்




திமுக ஆபீசுக்கு கரண்ட் பில் கட்டியவரே எம்ஜிஆர்தான்.. எங்களது ரத்தத்தில்கூட திமுக எதிர்ப்புதான்.. அந்த செய்தியை கேட்டு 4 நாட்கள் தூக்கம் இல்ல. எல்லோரும் ஒற்றுமையாக இருந்த அதிமுக கடலாக மாறிவிடும். மீண்டும் வருவோம், ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அதிமுகவிற்கு இப்போதைய தேவை ஒற்றுமை மட்டுமே. திமுக எதிர்ப்பு மனப்பான்மையை ஒருபோதும் விடமாட்டோம். அதிமுகவை அழிக்க நினைத்த கட்சி திமுக என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், நான் யார் மீதும் விருப்பு வெறுப்புடன் இல்லை. பொதுச் செயலாளர் என்பவருக்கு விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது என மறைந்த முதலமைச்சர் அம்மாவிடமே நான் கூறியுள்ளேன். நான் ஆரம்பத்தில் இருந்து கூறி வருவது ஒன்றுதான், அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிக்க : தவெக வெற்றியின் வீச்சு கொளத்தூர் தேர்தல் முடிவுகளை பார்த்துமா புரியவில்லை.. முதல்வர் விஜய் கடும் தாக்கு!
இதற்கிடையில், தவெக அரசுக்கு, ஆதரவளித்த அதிமுக நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் டாக்டர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ், தங்கமணி, எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா, கே.வி. ராமலிங்கம், பி.பாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, அருண்மொழித்தேவன், ரவி சுகுமார், மகேந்திரன், சீனிவாசன், பரஞ்சோதி, ரத்தினசாமி உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.