திருச்சூர் கோர விபத்து.. 8 பேரின் உயிரைப் பறித்ததன் காரணங்கள் என்ன?.. கள நிலவரமும் பின்னணியும்!!
Thrissur Accident Reason: கேரளாவின் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலை கைமங்கலம் பகுதியில் 7 தமிழ்நாட்டு மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த கோர விபத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காகக் அமைக்கப்பட்ட திருப்பங்கள், போதிய வெளிச்சமின்மை மற்றும் நிழலில் நிறுத்தப்பட்டிருந்த லாரியே முக்கியக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர், 05: கேரள மாநிலம் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கைமங்கலம் பனம்பிகுன்னு பகுதியில் நள்ளிரவில் நடந்த கோர விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விடுமுறையைக் கழிப்பதற்காகத் திண்டுக்கல், சேலம் மற்றும் மதுரையிலிருந்து கேரளாவுக்குக் காரில் சுற்றுலாச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தத் துயரமான சம்பவத்திற்கு காரின் அதிவேகம் மட்டுமன்றி, அந்தச் சாலையில் நிலவிய ஆபத்தான உள்கட்டமைப்பு குறைபாடுகளுமே மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளன என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: கேரளாவில் நடந்த கோர விபத்து – அப்பளம் போல் நொறுங்கிய கார்.. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு..
நள்ளிரவில் நேர்ந்த துயரம்:
நேற்று நள்ளிரவு சுமார் 11:50 மணியளவில் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கைமங்கலம் என்ற பகுதியில் மாணவர்கள் பயணித்த கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, போதிய வெளிச்சமில்லாத காரணத்தினால், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாகக் பலமாக மோதியது. இந்த விபத்தின் கோரத் தாண்டவத்தில் காரில் பயணித்த 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர்களது உயிரும் பரிதாபமாகப் பிரிந்தது.
உயிரிழந்த மாணவர்களின் விவரங்கள்:
இவ்விபத்தில் உயிரிழந்த 8 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த விஷ்வா, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா, யுவர் சஞ்சித், ஜீவா ஜோசுவா, மற்றும் மதுரையைச் சேர்ந்த சந்தோஷ், பிரசன்னா ஆகிய மாணவர்கள் இந்த விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சாலையோரப் பணிகளும் வெளிச்சமின்மையும்:
விபத்திற்கு வழிவகுத்த முதன்மைக் காரணமாக, தேசிய நெடுஞ்சாலை 66-ல் (NH 66) விரிவாக்கப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதற்காகப் பல இடங்களில் தற்காலிகமாகப் பாதைகள் திருப்பி விடப்பட்டுள்ளன. பணி நடைபெறும் இந்தச் சாலைப் பகுதியில் போதிய வீதி விளக்குகளோ அல்லது இரவில் ஒளிரக்கூடிய தெருவிளக்கு வசதிகளோ செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் நள்ளிரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்றபோது ஓட்டுநருக்குச் சாலை தெளிவற்றதாக இருந்துள்ளது.
அபாயகரமான இடத்தில் நிறுத்தப்பட்ட லாரி:
அதோடு, சாலை முடிகிறது, சாலை திருப்பம் குறித்த எந்த முன்னறிவிப்பு பலகையும் இல்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. பாதைகள் திருப்பி விடப்பட்ட இடத்திற்கு மிக அருகிலேயே சரக்கு லாரி ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இருள் சூழ்ந்த பகுதியில் லாரி நிறுத்தப்பட்டிருந்ததும், அதற்குரிய ஆபத்து எச்சரிக்கைக் குறியீடுகள் ஏதும் வைக்கப்படாததும் காரை இயக்கிய மாணவருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
எச்சரிக்கைப் பலகைகள் இல்லாமை:
மேலும், சாலைப் பணிகள் நடைபெறும் இடத்தைக் குறிக்கும் வகையில் ஒளிரும் பலகைகளோ அல்லது வேகத்தைக் குறைக்கும் தடைகளோ அப்பகுதியில் முறையாக அமைக்கப்படவில்லை. அவ்வாறு எச்சரிக்கை பலகை வைத்து வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தாதே விபத்துக்கு முக்கிய காரணம் என்றும், காரும் அதிவேகத்தில் வந்த நிலையில், திடீரெனக் குறுக்கே நின்ற லாரியைக் கண்டு உடனடியாகப் பிரேக் பிடிக்க முடியாமல் காரின் முன்பகுதி லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: உணவுப்படி உயர்வு முதல் புதிய வாகனம் வரை.. நிறைவேற்றப்பட்ட உடனடி வாக்குறுதிகள்.. ஒத்திவைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்..
காவல் துறை தீவிர விசாரணை:
இச்சம்பவம் குறித்துக் கேரள மாநிலக் கைமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்ததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்ற கோணத்தில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சாலையோரம் விதியை மீறி லாரியை நிறுத்திச் சென்ற நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.