அம்ரித் பாரத் திட்டம்… புதுப்பொலிவுடன் தயாராகும் புதுச்சேரி ரயில் நிலையம்!
Puducherry Railway Station: அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ. 93 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பிரம்மாண்டமான முறையில் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு, வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்காக வருவது வழக்கமாகும். இதனால், வழக்கமாக வார இறுதி நாட்களில் புதுச்சேரி மாநிலத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அவ்வாறு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் விரும்புவது ரயில் பயணங்களை தான். ஏனென்றால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வருவது வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் மத்தியில் புதுச்சேரி ரயில் நிலையம் மற்றும் ரயில் பயணம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, கிழக்கு கடற்கரைச் சாலை வழிப்பாதை ஆகும்.
ரூ.93 கோடியில் புதுச்சேரி ரயில் நிலையம் மேம்பாட்டு பணி
இந்த வழியாக, இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசித்தவாறு புதுச்சேரிக்கு சுற்றுலாவுக்காக படை எடுப்பது வழக்கமாகும். இந்த நிலையில், புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமிரித் பாரத் ரயில் நிலையம் என்ற திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வே சார்பில் புதுச்சேரி ரயில் நிலையம் ரூ.93 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: ஓட்டு போட சொந்த ஊர் சென்ற போது கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..




பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைக்கும் பணி
இதில், புதுச்சேரி ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி இடித்து அகற்றப்பட்டு, அந்த பகுதியில் பிரம்மாண்ட நுழைவு வாயில் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதே போல, ரயில் நிலையத்தில் உள்ளே பயணிகள் காத்திருப்பு அறை, நடை மேம்பாலம், புதிதாக லிப்ட் அமைக்கும் பணி, ஒரு நடைமேடையில் இருந்து வேறு நடைமேடை செல்வதற்காக எஸ்கலேட்டர் அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்தும் இடம், உணவகம், வணிக வளாகம் ஆகியவை புதிதாக அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புத்தம் புதிதாக மாறும் புதுச்சேரி ரயில் நிலையம்
இதே போல, ரயில் நிலையத்தில் உள்ள கட்டடங்கள் சீரமைப்பு பணி, பார்சல் அலுவலகம் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம், ரயில் ஓட்டுநர்கள் ஓய்வறைகள் கட்டும் பணி ஆகியவையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புத்தம் புதிதாக புதுச்சேரி ரயில் நிலையம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த பணிகளை பிரதமர் மோடி காணொளி மூலமாக தொடங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TN Election 2026: தேர்தல் நேர கூட்டத்தை சமாளிக்க சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கம்…