இனி நல்லது நடக்கும்.. அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் விட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்..
Anbumani Meets Ramadoss: தந்தையின் திருமண நாளை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்த அன்புமணி ராமதாஸ், அவரிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "இனி நல்லது நடக்கும்" எனத் தெரிவித்தார்.
ஜூன் 24, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையே நீடித்து வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு தற்போது சுமுகமான முடிவை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. தந்தையின் திருமண நாளை ஒட்டி, தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்த அன்புமணி ராமதாஸ், அவரிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “இனி நல்லது நடக்கும்” எனத் தெரிவித்தார்.
இரண்டாக பிரிந்த பாமக:
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மற்றும் மகன் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த சூழலில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்து சந்தித்தது. குறிப்பாக, அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி என இரண்டாகப் பிரிந்த சூழலில், அன்புமணி தரப்பு பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டதுடன், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: சட்டசபையில் முதல்வர் விஜய்யின் ஆக்சன் மரபு மீறலா? பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, சசிகலா தொடங்கிய புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது.
ராமதாஸை குடும்பத்தினருடன் சந்தித்த அன்புமணி:
தனது குடும்பத்துடன் தைலாபுரம் வந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆசி பெற்ற அன்புமணி @draramadoss #pmk pic.twitter.com/xlI45VMi42
— Mahalingam Ponnusamy (@mahajournalist) June 24, 2026
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சமரசம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த சூழலில், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சென்றார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தந்தையின் 61-வது திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்தினருடன் சென்று அன்புமணி ராமதாஸ் அவரை சந்தித்தார். அப்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாசை கட்டியணைத்து கண்ணீர் விட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “தந்தையின் திருமண நாளை ஒட்டி குடும்பத்தினருடன் வந்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றேன். இனி நல்லது நடக்கும்” எனத் தெரிவித்தார். இதன் மூலம், தந்தை மற்றும் மகன் இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.