Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மழை ஓய்ந்தது… நீலகிரி சுற்றுலா தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு!

Nilgiris Rains: நீலகிரியில் கனமழைக்குப் பின்னர் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்து சாலைகள் மற்றும் மின்சாரம் பாதிக்கப்பட்டது. சாலை சேதங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சில தலங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மழை ஓய்ந்தது… நீலகிரி சுற்றுலா தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு!
நீலகிரி சுற்றுலா தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்புImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 28 May 2025 10:58 AM

நீலகிரி மே 28: நீலகிரி மாவட்டத்தில் (Ooty Heavy Rain) இடைவிடாமல் பெய்த மழை தற்போது குறைந்ததால், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் 2025 மே 28 இன்று மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த நாட்களில் மரங்கள் விழுந்து சாலைகள் மற்றும் மின்சாரம் பாதிக்கப்பட்டது. பார்சன்ஸ் வேலி அணையிலிருந்து குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. கல்லட்டி சாலையில் பாறை விழுந்து சேதமான சாலை சரிசெய்யப்பட்டது. எனினும் பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் (Pine forest, shooting range) உள்ளிட்ட சில தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. மழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழை 2025 மே 28 இன்று ஓய்வு பெற்றுள்ளது. இதனால், மூடப்பட்டிருந்த ஊட்டி பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்

தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கடந்த 4 நாட்களாக நீலகிரியில் கனமழை பெய்தது. பருவமழைக்கான காற்றழுத்த தாழ்வு மண்டலமும் காரணமாக, ஊட்டியில் பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்தன. பார்சன்ஸ் வேலி பகுதியில் மரங்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஊட்டியின் குடிநீர் விநியோகம் 5 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் சேதம் – போக்குவரத்துக்கு தடையில்லை

கல்லட்டி – மசினகுடி சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் சாலை சேதமடைந்தது. இதனை நெடுஞ்சாலை துறை பொக்லைன் மூலம் சீரமைத்து வாகனப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தது.

இன்னும் மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்கள்

மழை ஓய்ந்தாலும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் போன்ற இடங்கள் பாதுகாப்பு காரணமாக இன்னும் திறக்கப்படவில்லை. அதேபோல், தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்டவை தமிழ்நாடு சுற்றுலா கழகம் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவையும் திறக்கப்படவில்லை.

வெள்ளத்தில் சிக்கிய கார் மீட்பு – விவசாயம் பாதிப்பு

கூடலூரில் தர்மகிரி அருகே காட்டாற்றில் சிக்கிய புதிய கார் மீட்கப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. கேரட் உள்ளிட்ட பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அணைகள் நிரம்பியதால் மாயாறு மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நிவாரண முகாமில் அரசியல் தலைவர்கள்

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர், புத்தூர் வயல் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

கடந்த 24 மணி நேர மழைப் பதிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 256 மி.மீ., எமரால்டில் 132 மி.மீ., அப்பர் பவானியில் 123 மி.மீ., சேரங்கோட்டில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் முழுவதும் வெள்ள அபாய நிலை தொடர்கிறது.