1.5 மாத குழந்தையின் மீது விழுந்த 2.5 வயது சிறுவன்.. பச்சிளம் குழந்தை பரிதாப பலி!
1.5 Months Old New Born Baby Died | தேனியில் தரையில் தூங்க வைக்கப்பட்டு இருந்த 1.5 மாத குழந்தையின் மீது இரண்டரை வயது சிறுவன் தடுமாறி விழுந்த நிலையில், பச்சிளம் குழந்தை மூக்கில் ரத்தம் கசிந்து பரிதாபமாக பலியானது.
தேனி, நவம்பர் 27 : தேனி (Theni) மாவட்டம், கம்பம் அருகே உள்ள காக்கில் சிக்கையகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு 22 வயதில் அபிசதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், அபிசதா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதன் காரணமாக அவர் 2 மதங்களுக்கு முன்பு கூடலூர் பசும்பொன் நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். இந்த நிலையில், நவம்பர் 14, 2025 அன்று கம்பம் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பச்சிளம் குழந்தை மீது தவறி விழுந்த சிறுவன்
பிரசவத்திற்கு பிறகு அபிசதா தனது தாய் வீட்டிலேயே தங்கியுள்ளார். இந்த நிலையில், குழந்தையை தரையில் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டு வேலைகளை செய்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரின் மூத்த மகனான இரண்டரை வயது சிறுவன் கால் தடுமாறி அந்த பச்சிளம் குழந்தை மீது விழுந்துள்ளார். இதன் காரணமாக குழந்தைக்கு மூக்கில் ரத்த வர தொடங்கிய நிலையில், குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது.
இதையும் படிங்க : SIR படிவத்தால் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலையாளி – சென்னை கொலை வழக்கில் திடீர் திருப்பம் – பரபரப்பு தகவல்
உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை
குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்து பார்த்த அபிசதா, குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வருவதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் குழந்தையை அழைத்துக்கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அபிசதா கதறி அழுதுள்ளார்.
இதையும் படிங்க : வீட்டுல ஒத்த ரூபாய் கூட இல்ல.. திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்!
விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.