Tamil Nadu CM MK Stalin: மும்பையில் நீட் தேர்வு மோசடி! தரம் குறித்து கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!
NEET Exam Scam: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் ₹90 லட்சம் லஞ்சம் கொடுத்து மதிப்பெண்களை மாற்றியமைத்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த முறைகேடு, நீட் தேர்வு முழுவதும் ஊழல் நிறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது எனவும், அ.தி.மு.க.வின் அமைதிக்கு கண்டனம் தெரிவித்தார். #NEETisnotNEAT என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நீட் தேர்வு தகுதியை அல்ல, வியாபாரத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஜூன் 23: மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய நீட் நுழைவு தேர்வு (NEET Exam) நடத்தும் முறை ஒரு தார்மீக ஊழல் என்றும், அது ஒவ்வொரு கட்டத்திலும் முறைகேடுகள் நிறைந்தது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக பேசாததற்காக எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (AIADMK) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) கடுமையாக விமர்சித்தார். நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, வியாபாரத்தை பற்றியது மட்டுமே என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு இது. இதனால்தான் நாங்கள் அதை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம், #NEETisnotNEAT, அதற்கு எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது..?
மும்பையில் ரூ. 90 லட்சம் கொடுத்தால் நீட் தேர்வு மதிப்பெண்கள் மாற்றி அமைக்கப்படும் என கூறி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சிபிஐ கைது செய்தது. இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி மோசடியை அரங்கேற்றியுள்ளனர். சிபிஐ அதிகாரிகளே பெற்றோர்கள் போல் நடித்து, நேரே சென்று பேரம் பேசுவதுபோல வலைவிரித்து மோசடி செய்த நபர்களை கைது செய்தனர். தொடர்ந்து, குறைந்த மதிப்பெண் பெற்ற வேட்பாளர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி மதிப்பெண்களை அதிகரிக்க முடியும் என்றும், ஒரு வேட்பாளருக்கு 90 லட்சம் ரூபாய் கேட்டு, அந்தத் தொகையை 87.5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசினர். மும்பையின் பரேலில் உள்ள ஒரு ஹோட்டலில் பெற்றோருடன் சந்திப்புகள் நடந்ததாகவும், அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு NTA அதிகாரிகளை செல்வாக்கு செலுத்தி அதிக மதிப்பெண்களை வழங்க முடியும் என்றும் பொய்களை கூறியுள்ளனர்.




முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்:
Yet another case that proves NEET isn’t about merit; it’s only about the market. That’s why we’re saying it loud and clear, #NEETisnotNEAT, and we have every reason to.
தரம், தரம் என்றார்கள்!#NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும்… https://t.co/IUGaBIGwQy
— M.K.Stalin (@mkstalin) June 23, 2025
நீட் தேர்வு முறைகேடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தரம், தரம் என்றார்கள். நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் என்பது முதல் கோணல் முற்றிலும் கோணல். ஆர்.எஸ்.எஸ்- பாஜக மாநாடுகளில் ஷோபீஸ்-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” என்று குறிப்பிட்டிருந்தார்.