Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தென்காசி முதியோர் இல்லம்: உணவு விஷம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு

Tenkasi Old Age Home Tragedy: தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு உட்கொண்டதால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. காப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை அரசு மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி முதியோர் இல்லம்: உணவு விஷம் காரணமாக 6 பேர் உயிரிழப்பு
காப்பக உரிமையாளர் Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 23 Jun 2025 17:42 PM

தென்காசி ஜூன் 23: தென்காசி மாவட்டம் (Tenkasi), சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் முதியோர் காப்பகத்தில் (private nursing home) உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கெட்டுப்போன உணவு சாப்பிட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 6-வது நபரும் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனையில் (Nellai Government Hospital) சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் காப்பகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழப்புகளின் பின்னணி மற்றும் காரணம்

சம்பவம் நடந்த தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள “அன்னை நல்வாழ்வு டிரஸ்ட்” என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த இல்லத்தில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போனதால், பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில், ஜூன் 12, 2025 அன்று, சங்கர் கணேஷ் (48), முருகம்மாள் (45), அம்பிகா (40) ஆகிய மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் காப்பகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்த உணவு ஒவ்வாமை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

காவல்துறை நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலை

இந்தத் தொடர் உயிரிழப்புகள் குறித்து தகவல் அறிந்ததும், சாம்பவர் வடகரை போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காப்பக உரிமையாளர் ராஜேந்திரன் (50) என்பவரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீர் மாதிரிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வெளிவந்த பின்னரே, உணவில் என்ன குறைபாடு இருந்தது அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துத் தெரியவரும்.

நெல்லை அரசு மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை

தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் எட்டு பேர் குணமடைந்து வருவதாகவும், மூன்று பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துயரச் சம்பவம், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களின் தரம், உணவு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.