“மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக் கூடாது; உதவி மையத்தை அழையுங்கள்!”.. அமைச்சர் அருண்ராஜ் சொன்ன தகவல்!!
மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சிறிய அச்சம் அல்லது மன உளைச்சலாக இருந்தாலும், உடனடியாக இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஒரு சிக்கலை அணுகும் விதத்தை விட, நிபுணர்கள் அதைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறுபட்டதாக இருக்கும். அதன் மூலம் தங்களின் இன்னல்களுக்கு மிக எளிதாகத் தீர்வு காண முடியும் என்று அமைச்சர் விளக்கமளித்தார்.
சென்னை, ஜுன் 20: நீட் தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், மாணவர்கள் யாரும் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும், மன அழுத்தத்திற்குத் தீர்வு காண அரசு அமைத்துள்ள 104 உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வினால் மாணவர்களுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை முழுமையாக உணர்ந்துதான், தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!
மாணவர்களின் மனநிலை புரிகிறது:
நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ஒன்றாக உள்ளது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் கூறினார். மேலும், இந்த வருடம் ஒருமுறை நீட் தேர்வு நடந்து, அது ரத்தாகி மீண்டும் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது மாணவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் வருத்தம்:
இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார் என்று குறிப்பிட்ட அமைச்சர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் தேர்வு ரீதியான மன அழுத்தத்தைக் கையாள அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். நீட் தேர்வு மட்டுமின்றி, எந்தவொரு போட்டித் தேர்வு அல்லது தனிப்பட்ட காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
104 அவசர உதவி மையம்:
அரசு அவசர மருத்துவ உதவிக்கு எவ்வாறு அவசர உதவிச் சேவை உள்ளதோ, அதேபோல மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க தமிழ்நாடு அரசின் சார்பில் “நட்புடன் உங்களோடு” என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ‘14416’ மற்றும் 104 என்ற பிரத்யேக உதவி மையம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த உதவி மையத்தில் நன்கு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பணியில் உள்ளனர்.
நிபுணர்களின் வழிகாட்டுதல்:
மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சிறிய அச்சம் அல்லது மன உளைச்சலாக இருந்தாலும், உடனடியாக இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஒரு சிக்கலை அணுகும் விதத்தை விட, நிபுணர்கள் அதைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறுபட்டதாக இருக்கும். அதன் மூலம் தங்களின் இன்னல்களுக்கு மிக எளிதாகத் தீர்வு காண முடியும் என்று அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை அரசுப் பேருந்து ஓட்டுநர்.. ஸ்ரீதேவியின் சாதனைப் பயணமும்.. குவியும் மக்கள் ஆதரவும்!
எனவே, தமிழக மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய கடுமையான சூழல்களிலும் எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என முதலமைச்சர் சார்பாகக் கேட்டுக்கொள்வதாகத் தனது பேட்டியில் அமைச்சர் அருண்ராஜ் சுட்டிக்காட்டினார்.