சென்னை, ஏப்ரல் 27, 2026: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். சென்னையில் வசித்து வரும் அவர், சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனது சமூக வலைதளப் பக்கங்களில் திராவிட முன்னேற்றக் கழகம்-வை ஆதரித்தும், தமிழக வெற்றிக்கழகம்-த்தை கடுமையாக விமர்சித்தும் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், அவர் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதனால், இந்தச் சம்பவத்திற்கு அரசியல் பின்னணி இருக்கலாம் என்றும், தமிழக வெற்றிக்கழகத்தினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவின.
மேலும் படிக்க: தரமற்ற கேன் தண்ணீர் – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை – என்ன நடந்தது?
கார் தாக்குதலில் அரசியல் பின்னணி இல்லை:
இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜேம்ஸ் வசந்தன் தனது காரை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர், காரின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்..
இந்த விவகாரத்தில் அரசியல் காரணம் இருக்கலாம் என்று கருதி ஜேம்ஸ் வசந்தன் முதலில் புகார் அளித்திருந்தார். ஆனால், பின்னர் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்பது உறுதியாகியதால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கார் கண்ணாடியை உடைத்த வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பதிவில், “எனது கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் போலீசார் விசாரித்ததில் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.