மகளிர் உரிமைத்தொகை.. தமிழகத்தை நான் தான் ஆண்டு கொண்டிருக்கிறேன் – முதல்வர் விஜய்க்கு பதிலடி கொடுத்த மு.க ஸ்டாலின்..
கூட்டணி தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், “கூட்டணியே வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள். கட்சி நிர்வாகிகளும் அதையே கூறுகிறார்கள். எனவே அதனை பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம். “கலைஞர் அமைத்த கூட்டணி எப்போதும் கட்டுக்கோப்பாக இருந்தது. அதைப் போலத்தான் நானும் கூட்டணியை வழிநடத்த விரும்பினேன். எங்கள் கூட்டணியில் இருந்து யாரையும் நாங்கள் வெளியேற்ற மாட்டோம்.” என்றார்.
ஜூன் 25, 2026: திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணன் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் பேசிய அவர், “இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒன்று மதிவாணன் இல்லத் திருமணம்; மற்றொன்று கலைஞர் பிறந்த மண்ணான திருவாரூரில் இந்த விழா நடைபெறுவது” என்றார்.
முதல்வர் விஜய் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்:
தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பேசிய அவர், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ‘அப்பாவை காணோம்’ என்று பேசினார். தமிழகத்தில் விவசாய பிரச்சினை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருக்கும் போது இதுபோன்ற பேச்சுகள் தேவையற்றவை” என்று விமர்சித்தார்.
மேலும், “விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லை. கடன் தள்ளுபடி கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய நேரத்தில் வேறு விஷயங்களை முன்னிறுத்துவது சரியல்ல” என்றும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக மக்களின் பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்த போதிலும், ஆளுங்கட்சியினர் சட்டப்பேரவை மரபுகளை மீறி செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் மனதில் நிரந்தரமாக இருக்கிறேன்:
“அப்பாவை எங்கும் தேட வேண்டாம். அவர் தமிழக மக்களின் மனதில் நிரந்தரமாக இருக்கிறார். எனது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையிலும், 5 ஆண்டுகால முதலமைச்சர் பதவிக் காலத்திலும், அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளேன். அதுபோல் இதுவரை யாரும் செயல்பட்டதில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருக்கும் வரை தமிழகத்தை நான் தான் ஆண்டு கொண்டிருக்கிறேன்” என்றும் கூறினார்.
மேலும் படிக்க: “முதல்வர் பேசமாட்டாரா?”.. திமுக பரப்பும் ‘போலி பிம்பம்’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் காட்டமான விளக்கம்!
கூட்டணி குறித்து என்ன சொன்னார்?
கூட்டணி தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், “கூட்டணியே வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள். கட்சி நிர்வாகிகளும் அதையே கூறுகிறார்கள். எனவே அதனை பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம்” என்றார்.
மேலும், “கலைஞர் அமைத்த கூட்டணி எப்போதும் கட்டுக்கோப்பாக இருந்தது. அதைப் போலத்தான் நானும் கூட்டணியை வழிநடத்த விரும்பினேன். எங்கள் கூட்டணியில் இருந்து யாரையும் நாங்கள் வெளியேற்ற மாட்டோம். அவர்கள் விரும்பி விலகிச் சென்றால் செல்லட்டும்; அதனால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் டி.ஆர் பாலு, கே.என் நேரு, முன்னாள் அமைச்சர் ரகுபதி, முத்தரசன், நாகை மக்களவை உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.