“முதல்வர் பேசமாட்டாரா?”.. திமுக பரப்பும் ‘போலி பிம்பம்’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் காட்டமான விளக்கம்!
"உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து கொண்டு, 'நாங்கள் ஆளுநருடன் சமரசம் ஆகிவிட்டோம்', 'குதிரை பேரம் பேசுகிறோம்', 'சோபா மாடல் அரசு' என்றெல்லாம் தவாறான தகவல்களை அவையில் பரப்புகிறார். அவை நேரலையில் ஒளிபரப்பப்படுவதால், சபாநாயகர் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கினாலும் மக்கள் மனதில் அது பதிந்துவிடும்.
சென்னை, ஜுன் 25: சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் குறித்து திமுகவினர் பரப்பி வரும் தவறான கருத்துக்களுக்கு, தவெகவைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். “தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எந்த முதலமைச்சரும் செய்யாத வரலாற்றுச் சாதனையையும், வெளிப்படைத்தன்மையையும் எங்களது முதலமைச்சர் நிலைநாட்டியுள்ளார். இதற்கு முன்பு ஆளுங்கட்சி முதலமைச்சர் பேசுவதை மட்டுமே ஊடகங்கள் காட்டும்; எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரலையில் கட் செய்துவிடுவார்கள்.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..
எங்களது தலைவருக்கு தைரியம் இருக்கு:
அந்த ‘இன்செக்யூரிட்டி’ முந்தைய ஆளுங்கட்சிகளுக்கு இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் பேசுவதையும் மக்கள் பார்க்க வேண்டும் என்ற துணிச்சலோடு, அவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் கொண்டு வந்தவர் எங்களது முதல்வர்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “தன் மீதும், தன் நிர்வாகத்தின் மீதும் முழுமையான நம்பிக்கையும், நேர்மையும் கொண்ட ஒரு தலைவரால் மட்டுமே சட்டமன்றத்தை நேரலையில் ஒளிபரப்ப முடியும். அந்த தைரியம் எங்களது தலைவருக்கு இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
சட்டமன்ற மரபு தெரியாதா?:
சட்டமன்றத்தில் முதலமைச்சர் அமைதியாக இருக்கிறார் என்ற திமுகவினரின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், “அவை மரபுப்படி, ஆளுநர் உரைக்கு முதலில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், கொறடாக்கள் பேசுவார்கள். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையை நிகழ்த்துவார். இவை அனைத்திற்கும் இறுதியாகத்தான் முதலமைச்சர் விரிவான பதிலளிப்பார். இதுதான் காலம் காலமாக இருக்கும் சட்டமன்ற மரபு. இதைத் தவெகவோ, முதலமைச்சரோ எங்கும் மீறவில்லை” என விளக்கமளித்தார்.
மேலும், “சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களான நாங்களும், தோழர் ராஜ்மோகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் மிகவும் மாண்புடனும், அடக்கத்துடனும் பதிலளித்து வருகிறோம். முதலமைச்சர் தினமும் 5 மணி நேரம் பொறுமையாக அமர்ந்து அனைத்தையும் கவனித்துக் குறிப்பெடுத்து வருகிறார். நிலைமை இப்படி இருக்க, ‘அவர் தலையில இடியே விழுந்தாலும் பேச மாட்டாரா? அவர் என்ன ஊமையா?’ என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நையாண்டியாகவும், ஒருமையிலும், கேலியாகவும் பேசுவது அவர்களின் தரத்தைக் காட்டுகிறது” என்று சாடினார்.
போலி நரேட்டிவ் செட் செய்யப் பார்க்கிறார்கள்:
“உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து கொண்டு, ‘நாங்கள் ஆளுநருடன் சமரசம் ஆகிவிட்டோம்’, ‘குதிரை பேரம் பேசுகிறோம்’, ‘சோபா மாடல் அரசு’ என்றெல்லாம் தவாறான தகவல்களை அவையில் பரப்புகிறார். அவை நேரலையில் ஒளிபரப்பப்படுவதால், சபாநாயகர் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கினாலும் மக்கள் மனதில் அது பதிந்துவிடும். அதனால்தான், அவர்கள் போலி நரேட்டிவ் செட் செய்யும் போதெல்லாம், நாங்கள் உடனடியாக எழுந்து அதற்குரிய உண்மைகளை விளக்கி மறுப்புத் தெரிவித்து வருகிறோம்” என்றார்.
மேலும் படிக்க: “மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்!”.. எ.வ.வேலு வீடுகளில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மக்களின் கண்காணிப்பில் புதிய சட்டமன்றம்:
“இன்று தமிழ்நாட்டில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான இளைஞர்களும், பெண்களும் சட்டமன்ற அரசியலை மிகக் கூர்மையாக கவனித்து வருகிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் மக்களின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். இதுதான் புதிய சட்டமன்றம், இதுதான் உண்மையான ஜனநாயகம். நான்கு நாட்களாக முதலமைச்சரைக் கேலி செய்த திமுகவினரைப் பார்த்து யாரும் கேள்வி எழுப்பாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக எவ்வித வெற்று மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் மக்கள் பணியைத் தொடர்ந்து செய்யும் என்றார்.