உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்.. அமைச்சர் விஸ்வநாதன் அசத்தல் அறிவிப்பு!
Higher Education Announcements : தமிழக உயர்கல்வித் துறையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை துறை அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார் .
தமிழக சட்டப்பேரவையில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், உயர் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அந்தத் துறையின் அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டு பேசினார். இதில், அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு கடந்த 2021- ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அரசு மற்றும் அரசு பொறியியல், தொழில்நுட்ப உதவி பெறும் பல்வகை கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு 2020- ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, சி.ஏ.எஸ். திட்டம் தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை முறையாக நீதிமன்ற ஆய்வு செய்து செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படும். அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரமாகவும், அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6 ஆயிரம் பேராசிரியர்கள் 3 கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள். மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி பயில்வதற்காக ரூ. 20 லட்சம் வரையிலான பிணையில்லாத கல்விக்கடன் வழங்க கல்வி உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக தொகுப்பு நிதி உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டமானது 2026- 2027 கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க: கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு!




செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்துக்கு ரூ. 50 லட்சம்
இளைஞர்கள் உலகளாவிய வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஜப்பான் மற்றும் ஜெர்மன் மொழி பெயர்ச்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதே போல, செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்துக்காக பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ. 5 லட்சம் மொத்தம் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
முதல் தலைமுறை மாணவர்களுக்கு கட்டண விலக்கு
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி, வாழ்வாதாரம், மருத்துவ செலவுக்காக உயர்கல்வியில் சேரும் 50 திருநர் மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்பட உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
மேலும் படிக்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!