ஊழல் ஆதாரம் இருந்தா நடவடிக்கை எடுங்க… எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தாதீங்க.. மார்க்சிஸ்ட் செயலர் பெ.சண்முகம்!
Marxist Shanmugam On Corruption Issue : எதிர்க் கட்சிகள் மீதான ஊழல் தொடர்பான கோப்புகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம், அதைவிடுத்து விட்டு அவர்களை அச்சுறுத்துவது போல முதல்வர் ஜோசப் விஜய் பேசக்கூடாது என்று மார்க்சிஸ்ட் மாநில செயலர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, முதல்வர் ஜோசப் விஜய் ஊழல் தொடர்பான கோப்புகள் தனது மேஜையில் இருப்பதாகவும், அதனை ஓபன் செய்து விட வைத்து விடாதீர்கள் என்றும், நேரம் வரும் போது நானே அதனை ஓபன் செய்து நடவடிக்கை எடுப்பேன். சட்டமன்ற இடைத்தேர்தலில் சிலருக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதல்வரின் இந்த கருத்து குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் அமைச்சர் ஜோசப் விஜய் 3 கோப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். அவரது கையில் இருக்கும் அந்த கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து விட்டு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது போன்று அவர் கூறும் விதம் பொருத்தமானதாக இல்லை.
ஊழல் ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட துறைகளில் ஊழல் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், அதன் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் முதல் அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் ரத்து செய்யப்பட்டு வி.பி.ஜி.ராம்ஜி. என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், சுமார் 40 % நிதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், மத்திய அரசு அறிவித்தவாறு 40 சதவீதம் நிதியை எவ்வாறு வழங்க முடியும்.
மேலும் படிக்க: தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பில்லை… உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!




100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை உத்தரவாதம் இல்லை
இந்த திட்டத்தை முடக்குவதற்கான அறிவிப்பாகவே மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது. கிராமப்புற மக்களுக்கு உத்தரவாதமான வேலை என்று இருந்த 100 நாள்கள் வேலை திட்டம் உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது. எனவே, அனைத்து குடும்பங்களுக்கும் வேலைகள் அளிக்கும் வகையில் போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நிலையில், அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சர்க்கரை விலை ஒரு கிலோவுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்
இதேபோல, கேஸ் விலை உயர்ந்தால் டீ விலை உயர்ந்து சர்க்கரை விலை உயர்வால் இன்னும் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் தன்னிடம் ஊழல் தொடர்பான கோப்புகளை கொடுத்துள்ளதாகவும், அதன் மீது நேரம் வரும்போது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நெல்லை- தென்காசியில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. மதுக்கடைகள் மூடல்.. பெரும் போராட்டம்!