Tirunelveli: மதிக்காத மனைவி,மகன்.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்!
Tirunelveli Crime News: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே காரைகுளத்தைச் சேர்ந்த சகாரியா என்பவர், தனது மனைவி மெர்சி மற்றும் மகன் ஹார்லி பினோவை கொலை செய்து, பின்னர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, ஆகஸ்ட் 25: திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவி மற்றும் மகனை கொலை செய்து விட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே காரைகுளம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள சர்ச் தெருவை சேர்ந்தவர் சகாரியா. 66 வயதான இவர் தனது மனைவி மெர்சி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் சகாரியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மெர்சி தனது இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் அதே தெருவில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இதில் இரண்டாவது மகனான ஹார்லி பினோ அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருந்தார்.
உடன்பாடு இல்லாமல் மகன் திருமணம்
இப்படியான நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி மூத்த மகன் ஹென்ரிக்கு திருமணம் நடந்தது. ஆனால் இதில் சகாரியாவுக்கு உடன்பாடு இல்லை என சொல்லப்படுகிறது. அதேசமயம் மெர்சியும் தனது மகனின் திருமணத்திற்கு அவரை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சகாரியா பழிவாங்கும் நோக்கில் தக்க சமயத்திற்கு காத்திருந்துள்ளார். இந்த நிலையில் இரண்டாவது மகனான ஹார்லி பினோ தனது தந்தை சகாரியா வசித்து வரும் வீட்டில் மீதமிருக்கும் தனது துணி உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் எடுத்து வருவதற்காக நேற்று (ஆகஸ்ட் 24 )மதியம் சென்றுள்ளார்.
ஏற்கனவே கணவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என பயந்து போன மெர்சி தனது மகன் பாதுகாப்பிற்காக பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். இருவரும் சகாரியாவின் வீட்டுக்குள் நுழைந்த நிலையில் அப்போது அங்கிருந்த அவர் தனது மனைவி மற்றும் மகனை நேரில் பார்த்து கடும் ஆத்திரமடைந்தார்.




Also Read: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!
அவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். மேலும் வீட்டிலிருந்து எந்த உடைமையும் எடுத்துச் செல்லக்கூடாது என சகாரியா தெரிவித்துள்ளார். அதையும் மீறி மெர்சி மற்றும் ஹார்லி பினோ உடமைகளை எடுக்க முயன்றனர். இதனால் கடும் கோபம் அடைந்த சகாரியா ஒரு அறைக்குள் தனது மனைவி மற்றும் மகனை பிடித்து தள்ளினார்.
கதவை பூட்டிவிட்டு வீட்டில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஜன்னல் வழியாக அவர்கள் இருந்த அறைக்குள் ஊற்றினார். மரண பயத்தில் இருந்த மெர்சி மற்றும் ஹார்லி பினோ தங்கள் இருவரையும் விட்டுவிடுமாறு கெஞ்சினர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத சகரியா பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதனால் அறை முழுதும் தீப்பிடித்து ஹார்லி பினோ மற்றும் மெர்சியும் தீக்கிரையாயினர்.
அடுத்தடுத்து உயிரிழப்பு
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சகாரியாகவும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.
Also Read: மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!
உள்ளே படுகாயம் உடன் பிறந்த மெர்சி மற்றும் ஹார்லி பினோ ஆகியோரையும் அறையின் வெளியே துடித்துக் கொண்டிருந்த சகாரியாவையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மெர்சி மற்றும் ஹார்லி பினோ ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். சகாரியாவுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது