தமிழ்நாடு பிரதிநிதியாக கர்நாடக தொழிலதிபர்.. முதல்வர் விஜய்யின் முடிவுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!
இந்த நிலையில், இந்தப் பொறுப்புக்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும், கர்நாடகாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருமான வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கான நிதி, திட்டங்கள் மற்றும் உரிமைகளைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை ஒருங்கிணைப்பது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் கடமையாகும்.
சென்னை, ஜுன் 27: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதற்குத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் தமிழ்நாட்டின் நலன்கள் பாதிக்கப்படும் என்று தலைவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், இதற்கான உத்தரவு தவெக கூட்டணியில் அவர் இணைந்த பின்னர் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இதையும் படிக்க: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் நீடிக்கும் இழுபறி?.. அடுத்தடுத்து ரத்தாகும் இணைப்பு விழா.. பின்னணி என்ன?
சர்ச்சைக்குரிய நியமனம் பின்னணி:
இந்த நிலையில், இந்தப் பொறுப்புக்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், கர்நாடகாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருமான வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கான நிதி, திட்டங்கள் மற்றும் உரிமைகளைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை ஒருங்கிணைப்பது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் கடமையாகும். டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி என்பது அமைச்சர் பதவிக்கு நிகரானதாகும். இந்த பதவியில் இருக்கக்கூடிய நபருக்கு டெல்லியில் பங்களா, அமைச்சருக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட அரசின் சலுகைகள் வழங்கப்படும். இப்படிப்பட்ட பதவிக்கு வெங்கட நாராயணாவை நியமனம் செய்ததே தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அரசியல் தலைவர்களின் சரமாரி விமர்சனங்கள்:
இதுகுறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டின் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தும் ஒரு செயலாகும் என்றும், இது ஒரு வெட்கக்கேடான விஷயம் என்றும் சாடியுள்ளார். மேலும், இந்த நியமனம் தற்போதைய அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடு என்று குற்றம் சாட்டியுள்ள சீமான், உடனடியாக வெங்கட நாராயணாவை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அரசுப் பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை நியமித்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரையே தமிழ்நாட்டின் பிரதிநிதியாக்குவது முறையல்ல என்று விமர்சித்துள்ளார்.
செல்வபெருந்தகை (காங்கிரஸ் தலைவர்):
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டால், தமிழக நலன் சார்ந்த காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் நமக்கு நீதி கிடைக்காது. மக்கள் மத்தியிலும் இந்த நியமனம் குறித்துப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி சிவா (திமுக எம்பி):
இந்த நியமனம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்காக இவர் உறுதியாக நின்று குரல் கொடுப்பாரா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் (பாஜக மாநிலத் தலைவர்):
ரியல் எஸ்டேட் அதிபரும், கர்நாடக முதலமைச்சரின் நெருங்கிய நண்பருமான ஒருவரைத் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமித்திருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஏற்கனவே காவிரி, மேகதாது, தென்பெண்ணையாறு போன்ற நதிநீர்ச் சிக்கல்கள் இருக்கும் சூழலில், இதனால் தமிழகத்திற்கு எப்படி நீதி கிடைக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்):
முதலமைச்சரின் இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்தது மற்றும் திரையுலகிலிருந்து விஜய் விடைபெறும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக வெங்கட் நாராயணாவுக்கு இந்தப் பதவி வழங்கி விஜய் அழகு பார்க்கிறார். இதன் மூலம் தான் ஒரு நவீன காலத்துக் கலிகுலா மன்னன் என்பதை விஜய் நிரூபித்துள்ளார்.
இதையும் படிக்க: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா மு.க.ஸ்டாலின்.. அவரே அளித்த முக்கிய பதில்!
பொது விமர்சனம்:
விஜய் திரையுலகில் இருந்து விலகியதற்குப் பிரதிபலனாக, அரசுப் பதவிகளைத் தனது தனிப்பட்ட நட்பு வட்டாரத்திற்கு வாரி வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நதிநீர் உரிமைகளுக்காக அண்டை மாநிலத்துடன் போராடி வரும் வேளையில், அம்மாநிலத்தைச் சேர்ந்தவரையே டெல்லிப் பிரதிநிதியாக நியமித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.