“பாஜகவின் உண்மையான பி டீமாக திமுக தான் செயல்பட்டது”.. அமைச்சர் அருண் ராஜ் குற்றச்சாட்டு!
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் குறித்து ஒரு விரிவான மற்றும் திறந்த மனதுடனான மறுஆய்வை அரசு மேற்கொள்ளும். ஆய்வு முடிவில் இத்திட்டம் மக்களுக்கு முழுமையாகப் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், அது கண்டிப்பாகத் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என்று தெளிவுபடுத்தினார்.
சென்னை, ஜுன் 19: எங்கள் அரசின் முதன்மை நோக்கமே தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசு மருத்துவமனையையும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை தரத்திற்கு நிகராக உயர்த்துவதுதான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்துதல், புறநோயாளிகளுக்கான புதிய ஆன்லைன் வசதி மற்றும் சட்டப்பேரவை மரபுகள் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் . குறிப்பாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டி முடிப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும் படிக்க: தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!
தமிழ்நாட்டில் சிறப்பாக உள்ளது:
மருத்துவ இடங்களை அதிகரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அகில இந்திய சராசரியை விட தமிழ்நாட்டில் மருத்துவர் – நோயாளி விகிதம் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போது மாநிலத்தில் சராசரியாக 250 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற வீதத்தில் உள்ளனர்” என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய கல்லூரிகளை அமைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடருமா?
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர், “தற்போது இத்திட்டத்தின் மூலம் பல பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டம் குறித்து ஒரு விரிவான மற்றும் திறந்த மனதுடனான மறுஆய்வை அரசு மேற்கொள்ளும். ஆய்வு முடிவில் இத்திட்டம் மக்களுக்கு முழுமையாகப் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், அது கண்டிப்பாகத் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று தெளிவுபடுத்தினார்.
பாஜகவின் பி டீம் திமுக தான்:
ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் இரண்டு முறை இசைக்கப்பட்டது மற்றும் மரபுகள் மீறப்பட்டதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றஅச்சாட்டுகளுக்கு அமைச்சர் அருண் ராஜ் மிகக் கடுமையான பதிலடி கொடுத்தார். “கடந்த காலங்களில் திமுக அரசு, ஆளுநர் உரையை வைத்து எந்தளவுக்கு அரசியல் செய்தது என்பது உங்களுக்கே தெரியும். முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்று கூறுவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதும் அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகமாகும்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க: பெற்ற மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநரான தந்தை அதிரடி கைது.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!
எங்களால் எப்படி முடிந்தது?
மேலும் பேசிய அவர், “நாங்களும் மாநில உரிமை, சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளைப் பேசித்தான் ஆட்சி நடத்துகிறோம். அப்படியிருக்கும் போது எங்களால் எப்படி இன்றைய ஆளுநர் உரையை எவ்விதப் பிரச்சினையுமின்றி சுமூகமாக நடத்த முடிந்தது? முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் எவ்விதத் தடையுமின்றி எப்படிப் பாட வைக்க முடிந்தது? இதிலிருந்தே பாஜகவின் உண்மையான ‘பி டீம்’ (B-Team) ஆக திமுக தான் செயல்பட்டது என்பதும், அவர்கள் திட்டமிட்டு மக்களை ஏமாற்றி முட்டாளாக்கி வைத்திருந்தார்கள் என்பதும் இன்றைய நிகழ்வின் மூலம் திட்டவட்டமாக நிரூபணமாகியுள்ளது” என்று கூறினார்.