20 நாட்களுக்கான கையிருப்பில் வீட்டு சிலிண்டர்கள்.. விற்றுத் தீர்ந்த வணிக சிலிண்டர்கள்.. சென்னையில் ஹோட்டல்கள் மூடல்..
LPG cylinder shortage: போர் தாக்கம் காரணமாக சிலிண்டர் இருப்பு மற்றும் விலையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணி நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 10: தமிழ்நாட்டில் 20 நாட்களுக்கு தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதேசமயம், தொழில் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதன் எதிரொலியாக, இன்றைய தினம் ஹோட்டல்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னையிலும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே வணிக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன.
இதையும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழகத்தில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்?.. மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை..
இதன் காரணமாக சென்னையில் இன்று ஒருசில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை, மதுரை, கோவையே சேர்ந்த பல ஹோட்டல்களில் குறைந்த அளவிலான எரிபொருள் தேவைப்படும் உணவுகளை மட்டுமே தயார் செய்து வருகின்றன. அதிக எரிபொருள் தேவைப்படும் உணவுகளை சமைப்பதை ஹோட்டல்கள் நிறுத்திவிட்டன. தொடர்ந்து, தமிழகத்தில் வரும் நாட்கள் ஹோட்டல்கள் இயங்குவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
20 நாட்களுக்கு வீட்டு சிலிண்டர்கள் கையிருப்பு:
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக தலைமை செயலர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து எண்ணெய் நிறுவனங்கள், நுகர்வோர் மற்றும் கூட்டுறவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில், தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்கள், வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளன என்பது குறித்து கேட்டறியப்பட்டது. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர்கள் இன்னும் 20 நாட்களுக்கு கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்களை பொறுத்தவரையில், தற்போது எந்த சிலிண்டரும் கையிருப்பில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு விரிவான கடிதம்:
இதைத்தொடர்ந்து, இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் எவ்வளவு வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தேவை எவ்வளவு உள்ளது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு விரிவான கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, மாநிலத்திற்கு தங்கு தடையின்றி சிலிண்டர் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தம்:
போர் தாக்கம் காரணமாக சிலிண்டர் இருப்பு மற்றும் விலையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணி நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போதைக்கு வேறு மாற்று எரிபொருட்களை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: எரிவாயு முன்பதிவு.. பயனாளர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
மேலும், நிலைமையை தொடர்ந்து, கண்காணித்து வருவதாகவும், எரிவாயு விநியோகம் சீரடைந்தவுடன் அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் வணிக சிலிண்டர்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.