25 நாட்களுக்கு பிறகே கேஸ் சிலிண்டர் முன்பதிவு:
கேஸ் முன்பதிவு தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி ஒரு கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு 25 நாட்கள் கழித்தே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். இதற்கு முன்பு இந்த கால இடைவெளி 21 நாட்களாக இருந்த நிலையில், தற்போது அதை 25 நாட்களாக அதிகரித்துள்ளது.
கேஸ் கையிருப்பை அதிகரிக்கவும், கருப்பு சந்தை விற்பனையை கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் எல்பிஜி (LPG) சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க கேஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான இணைப்புகளை விட வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் வழங்குதலுக்கு அதிக முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பு 55 நாட்களில் ஒரு சிலிண்டரை பயன்படுத்தியவர்கள் சமீபத்தில் 15 நாட்களுக்குள் மீண்டும் முன்பதிவு செய்யத் தொடங்கியதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு:
ஈரான் – இஸ்ரேல் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு பேரலுக்கு 130 டாலர் வரை உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், அந்த வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதியாக குறைந்துள்ளது. இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் நாட்டில் கேஸ் விலையும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ₹60 உயர்த்தப்பட்டதுடன், வணிக சிலிண்டர் விலை ₹110 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கேஸ் பயனாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் விலைகளும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. எனினும், இந்தியாவில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதால் உடனடி விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் போர் நீண்ட நாட்கள் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளது.