பாஜகவின் கோட்டையை தகர்த்த பிரசாந்த் கிஷோர்; பாங்கிபூர் இடைத்தேர்தலில் வரலாற்று வெற்றி
Bankipur Bypoll: தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ஜன சுராஜ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். இந்த வெற்றி பீகார் அரசியலில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஆகஸ்ட் 3, 2026: பீகாரின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஜன சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட இந்தத் தொகுதியில், முதல் முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றது பீகார் அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
பாஜகவின் கோட்டையாக இருந்த பாங்கிபூர்:
1995ஆம் ஆண்டு முதல் பாங்கிபூர் தொகுதியில் பாஜக அல்லது அதன் வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர். ஆரம்பத்தில் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவும், பின்னர் நிதின் நவீனும் இந்தத் தொகுதியில் பாஜகவின் ஆதிக்கத்தை தக்க வைத்திருந்தனர். ஆனால், இந்த முறை அந்த ஆதிக்கத்திற்கு பிரசாந்த் கிஷோர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மொத்தம் 31 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பிரசாந்த் கிஷோர் 63,203 வாக்குகள் பெற்று 18,953 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 44,250 வாக்குகளும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வேட்பாளர் ரேகா குப்தா 14,085 வாக்குகளும் பெற்றனர்.
முதல்முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி:
பாட்னாவில் உள்ள இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில், தேர்தல் முடிவு பீகார் அரசியலில் பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, முதல் சுற்று முதல் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகித்தார். 31 சுற்றுகளில் 22வது சுற்று முடிவிலேயே அவர் 12,809 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்தத் தேர்தல் ஜன சுராஜ் மற்றும் பாஜக இடையேயான நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி மிகவும் பின்தங்கியது. இதன் மூலம் பாங்கிபூர் தொகுதி வாக்காளர்கள் ஆர்ஜேடிக்கு தெளிவான மறுப்பை தெரிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க: சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பந்து உயிரை பறித்தது.. கர்நாடகாவில் 5 வயது சிறுவன் பரிதாப பலி!
பாஜக மூத்த தலைவர் நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாங்கிபூர் தொகுதி காலியானது. இதையடுத்து, பாஜக இளம் முகமான நீரஜ் குமார் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தது. எனினும், உள்ளூர் மக்களின் மனநிலையை சரியாக கணிக்கத் தவறியதே தோல்விக்குக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள்:
மறுபுறம், தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக நகர்ப்புறத் தொகுதியான பாங்கிபூரை தேர்வு செய்த பிரசாந்த் கிஷோர், அதில் வெற்றியும் கண்டுள்ளார். குறிப்பாக, உள்ளூர் மேல்சாதி வாக்காளர்களின் அதிருப்தி மற்றும் மாற்றத்தை விரும்பிய இளைஞர்களின் ஆதரவு அவருக்கு சாதகமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ஜன சுராஜ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். இந்த வெற்றி பீகார் அரசியலில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.