பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால்.. “எங்கள் கூட்டணி 220 இடங்களில் வெற்றி பெறும்”.. செல்வப்பெருந்தகை உறுதி
பாஜக எங்களின் கொள்கை எதிரி என விஜய் கூறிவிட்டு அவர்களிடம் எப்படி கூட்டணி வைப்பார்? அப்படி கூட்டணி வைத்தால் மக்கள் என்ன சொல்வார்கள் என்று உங்களுக்கு தெரியும். கண்டிப்பாக அவர் பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார். ஒருவேளை அவர்கள் கூட்டணி அமைத்துவிட்டால், எங்கள் கூட்டணி 220 இடங்களில் வெற்றி பெறும்.
சென்னை, மார்ச் 17: ‘காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும்’ என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ராஜா மற்றும் முன்னாள் எம்.பி. கே.பி.எஸ்.மணி ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களது உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, விஜய் வசந்த் எம்.பி., மாநில செயலாளர்கள் சுரேஷ் பாபு, அதரம் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: கூட்டணி இழுபறி.. தேர்தல் அறிக்கையுடன், வேட்பாளர் பட்டியல்?.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!!
234 தொகுதிகளிலும் களப்பணி:
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது, காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களில் தகுதியான நபர்களின் விவரங்களை தொகுதிவாரியாக அனுப்பியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான குழு கலந்தாய்வு செய்யும். இம்முறை யாரும் எதிர்பாராத அளவுக்கு எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும். அகில இந்திய தலைமை என்னை வேட்பாளராக நிறுத்தினால் போட்டியிடுவேன். இல்லையென்றால் 234 தொகுதிகளிலும் சென்று களப் பணியாற்றுவேன்.
கூடுதலாக 10 இடங்களில் வெற்றி:
எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் ஒரு ஆய்வினை நடத்தியுள்ளது. அவர்கள் தொகுதிகளின் விவரங்களை கொடுத்தால் அதை கேட்போம். கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை மாற்றக்கோரினால் மாற்றுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் சென்றால் எங்கள் கூட்டணி கூடுதலாக 10 இடங்களில் வெற்றி பெறும்.
கூட்டணிக்கு செல்ல மாட்டார்:
பாஜக எங்களின் கொள்கை எதிரி என விஜய் கூறிவிட்டு அவர்களிடம் எப்படி கூட்டணி வைப்பார்? அப்படி கூட்டணி வைத்தால் மக்கள் என்ன சொல்வார்கள் என்று உங்களுக்கு தெரியும். கண்டிப்பாக அவர் பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார். ஒருவேளை அவர்கள் கூட்டணி அமைத்துவிட்டால், எங்கள் கூட்டணி 220 இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க: கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை கேள்வி..
காங்., போட்ட கூட்டணி கணக்கு:
முன்னதாக, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமையலாம் என்ற யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பலமாக நிலவின. குறிப்பாக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸிற்கு இழுபறி நீடித்தபோது, விஜய்யின் வருகை காங்கிரஸிற்கு ஒரு புதிய வாய்ப்பாக அமையலாம் என்று கருதப்பட்டது. எனினும், இறுதியில் அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மதச்சார்பற்ற கொள்கை மற்றும் நீண்டகால அரசியல் உறவின் அடிப்படையில், காங்கிரஸ் தனது பழைய கூட்டாளியான திமுகவுடனேயே கூட்டணியை உறுதி செய்தது.