தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விரிசல்.. பாதியில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவை!
Hosur Flyover Collapse: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலத்தின் 'எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' பகுதியில் ரோப் அறுந்து, பாலம் சேதமடைந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி ஜூன் 22: கிருஷ்ணகிரி மாவட்டம் (Krishnagiri District) ஓசூர் பஸ் நிலையம் (Hosur Bus Stand) அருகே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (Bangalore National Highway) மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு 3 கி.மீ. நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலத்தின் ‘எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்’ பகுதியில் ரோப் அறுந்து, பாலம் பில்லரிலிருந்து முக்கால் அடி வெளியே சறுக்கியது. பாதுகாப்பு காரணமாக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டதால் நகரம் முழுவதும் போக்குவரத்து மிகுந்தது. கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் பயன்படுத்தப்பட்ட இந்த மேம்பாலம் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைப்புக்கு நாட்கள் எடுக்கும் என தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதால், வாகன போக்குவரத்து 2025 ஜூன் 21 ஆம் தேதி மதியம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ. தொலைவில் வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டது. தினசரி 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில், மதியம் 12:30 மணிக்கு மேம்பாலத்தின் “எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்” பகுதியில் ரோப் அறுந்து, ஸ்பிரிங் முறிந்ததால் பாலம் பில்லரிலிருந்து வெளியே சறுக்கியது.




ஓசூர் நகரம் முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு
வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லுவதால் ஆபத்து ஏற்படும் நிலையில், அந்த வழியிலான போக்குவரத்து நிறுத்தி, வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பி விட காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். இதனால் ஓசூர் நகரம் முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பத்தலப்பள்ளி முதல் ஓசூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல்
#Hosur Busstand Flyover Damaged. Major Shift . Travelling towards Bangalore from Tamilnadu NH44 is distrupted. Take action. @nitin_gadkari @NHAI_Official pic.twitter.com/YbyiVY69GH
— Lakman (@Lakman2020) June 21, 2025
கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை என புகார்
ஏற்கனவே நகரத்தில் பல்வேறு சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து தடைப்பட்டு வருவது, தற்போது இந்த மேம்பால பழுது காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்தப்பட்டதால் இப்போது பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சீரமைப்பு பணிகள் முடிந்த பின்பே போக்குவத்து மீண்டும் தொடங்கும்
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் பிரசன்னா தலைமையில் அதிகாரிகள் 2025 ஜூன் 21 ஆம் தேதி நேற்று மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்தனர். மைய இணைப்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக வாகன ஓட்டத்தை தற்காலிகமாக தடுத்து, சர்வீஸ் சாலையிலே மாற்றிவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹைதராபாத்திலிருந்து திட்ட அதிகாரி வரவிருக்க, ஜாக்கி வைத்து சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்றும், அது முடிந்த பிறகே வாகன ஓட்டம் மீண்டும் அனுமதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.