இலவச சைக்கிள் டிசைனை மாற்றும் முடிவில் அரசு.. மாணவர்கள் வைக்கும் கோரிக்கை என்னென்ன?
தற்போதைய தலைமுறைக்கு ஏற்ப நவீன வடிவமைப்புடன் புதிய சைக்கிள்களை வழங்க வேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான விருப்பமாக உள்ளது. "கிராமப்புறங்களில் இருந்து நீண்ட தூரம் கடந்து பள்ளிக்கு வரும்போது, பழைய மாடல் சைக்கிள்களில் வேகமாக வர முடிவதில்லை. இதனால் பள்ளிக்கு வர தாமதமாகி விடுகிறது" என மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை, ஜுன் 26: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சைக்கிள்களின் வடிவமைப்பை மாற்றி, புதிய மாடலில் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய சைக்கிள்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த தங்களது கருத்துக்களையும், கோரிக்கைகளையும் ஆர்வமுடன் பகிர்ந்துள்ளனர். அவ்வாறு மாணவர்கள் முன்வைத்துள்ள முக்கியக் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய் – வெளியான அறிவிப்பு
முந்தைய சைக்கிள்களில் இருந்த சிக்கல்கள்:
கடந்த காலங்களில் அரசு வழங்கிய சைக்கிள்கள் தங்களுக்குப் பயனுள்ளதாக இருந்த போதிலும், சில தரக் குறைபாடுகள் மற்றும் சிக்கல்களைச் சந்தித்ததாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “முன்பு கொடுத்த சைக்கிள்களை நாங்கள் ஓட்டிக் கொண்டுதான் இருந்தோம். ஆனால், அடிக்கடி பஞ்சர் ஆவது மற்றும் செயின் அறுந்து போவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. தரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தி வழங்கினால் நன்றாக இருக்கும்” என்று சில மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகப் பள்ளிகளில் சைக்கிள்கள் சரிவர வழங்கப்படாததால், பள்ளிக்கு நடந்து செல்வதிலும், நேரத்திற்குச் செல்வதிலும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நவீன ‘கியர்’ சைக்கிள்களுக்குக் கோரிக்கை:
தற்போதைய தலைமுறைக்கு ஏற்ப நவீன வடிவமைப்புடன் புதிய சைக்கிள்களை வழங்க வேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான விருப்பமாக உள்ளது. “கிராமப்புறங்களில் இருந்து நீண்ட தூரம் கடந்து பள்ளிக்கு வரும்போது, பழைய மாடல் சைக்கிள்களில் வேகமாக வர முடிவதில்லை. இதனால் பள்ளிக்கு வர தாமதமாகி விடுகிறது” என மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
“இப்போதைய தலைமுறைக்கு ஏற்றவாறு நவீன மாடலிலோ அல்லது ‘கியர்’ வசதியுடனோ சைக்கிள்களைக் கொடுத்தால், எங்களால் மிக வேகமாகவும், அதே நேரத்தில் களைப்பின்றியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும்” என்று கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெற்றோரின் சிரமம் குறையும்:
சைக்கிள் வசதி கிடைப்பது தங்களது குடும்பத்தினருக்குப் பெரும் உதவியாக இருக்கும் என மாணவிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். “நானும் என் தங்கச்சியும் பள்ளிக்குச் செல்ல அப்பா தான் தினமும் கூட்டிட்டுப் போகணும், வரணும். அவர் வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் எங்களை வந்து அழைத்துச் செல்வதற்குள் ரொம்பவே கஷ்டப்படுகிறார். இப்போது அரசு புதிய சைக்கிள் கொடுத்தால், நாங்களே ஈஸியாகப் பள்ளிக்குச் சென்று விடுவோம்; அப்பாவின் சிரமமும் குறையும்” என்று மாணவி ஒருவர் மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் வசதிகள் என்னென்ன தேவை?
புதிய வடிவமைப்பில் மாணவர்கள் சில எளிய கட்டமைப்பு மாற்றங்களையும் எதிர்பாற்கிறார்கள். பள்ளிப் பைகளை வைப்பதற்குப் பின்புறத்தில் வசதியான ஸ்டாண்ட் அமைக்கப்பட வேண்டும் என்றும், குடிநீர் பாட்டில்களை வைப்பதற்கான ஹோல்டர்கள் மற்றும் எளிதாக அழுத்தி ஓட்டக்கூடிய சுலபமான பெடல்கள் இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைப் பட்டியலிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: அமோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம்.. 3 பேர் குழு அதிரடி விசாரணை.. முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்!
தமிழக அரசின் இந்த புதிய வடிவமைப்பு முடிவு தங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள மாணவர்கள், தங்களது நீண்ட தூரப் பயணத்திற்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய வலுவான மற்றும் நவீன சைக்கிள்களை அரசு விரைந்து வழங்க வேண்டும் என ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.