அமெரிக்க ஜனாதிபதியாக கூட ஆகலாம், ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது… – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
EPS Reacts to CM Vijay: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், “அடுத்த பிரதமர் விஜய்” என்ற பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என்றார்.
கோவை, செப்டம்பர் 1 : கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், “அடுத்த பிரதமர் விஜய்” என்ற பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என்றார். மேலும் தமிழகத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு எதையும் செய்யலாம் என்றும், ஆனால் வடமாநிலங்களில் அது நடக்காது என்றும் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
சபாநாயகர் தற்போது 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துவதாகவும், அடுத்து 24 மணி நேரம் நடத்தினாலும் நடத்துவார் போல தெரிகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்த அவர், சட்டமன்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்றும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாலும் அதன்படி செயல்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், நாளை மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளதாகவும், அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேச உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும், அதற்கு அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதை பார்ப்போம் என்றும் கூறினார்.
“அடுத்த பிரதமர் விஜய்” என்ற பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என்றும், அது அவருடைய விருப்பம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு எதையும் செய்யலாம் என்றும், ஆனால் வடமாநிலங்களில் அது நடக்காது என்றும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்பது அவர்களது செயல்பாடுகளை வைத்தே தெரிகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்களிலேயே செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.