திமுக – அதிமுக – பாஜக ரகசியக் கூட்டணி?.. அதிர்ச்சியை ஏற்படுத்திய துரை வைகோ!
Durai Vaiko Pudukkottai press meet: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அதிமுக மற்றும் பாஜக-வுடன் திமுக இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க முயன்றதாலேயே கூட்டணியை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டதோடு, தவெக அரசின் லஞ்சமற்ற நிதி மேலாண்மை முயற்சிகளைப் பாராட்டினார்.
புதுக்கோட்டை, ஜூலை 18: தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக எழுந்துள்ள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பியுமான துரை வைகோ புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக கூட்டணி உடைந்தது ஏன் மற்றும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவர் பேசினார். அதோடு, தமிழகத்தின் தற்போதைய புதிய அரசின் நிதி மேலாண்மை, நவோதயா பள்ளிகள் விவகாரம் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க: 2 பெரும் தவறுகளை செய்து விட்டேன்.. அதிமுக-திமுகவை குறிப்பிட்டு வைகோ விமர்சனம்!
மதவாதத்தை எதிர்க்கவே திமுக கூட்டணி:
கடந்த காலங்களில் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுக கூட்டணியில் நீடித்ததற்கான காரணத்தை விளக்கிய துரை வைகோ, “சாதி, மத பிரிவினைவாத அரசியல் தமிழ்நாட்டில் வேரூன்றிவிடக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்திற்காகவும், மதவாத அரசியலை தீவிரமாக எதிர்க்கவும் தான் நாங்கள் அன்று திமுக கூட்டணியில் இணைந்தோம். மதிமுக மட்டுமல்லாது காங்கிரஸ், பொதுவுடமை (கம்யூனிஸ்ட்) இயக்கங்கள் என அனைத்துமே தங்களுக்குள் பல கொள்கை வேறுபாடுகள் இருந்தபோதிலும், மதவாதத்தை எதிர்க்கும் வல்லமை திமுகவிற்கு மட்டுமே இருந்ததால் அந்த கூட்டணியில் பயணித்தோம்” என்று குறிப்பிட்டார்.
கூட்டணி உடைந்ததற்கான காரணம்:
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவோ அல்லது தேர்தல் கூட்டணி வைக்கவோ முயற்சிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர்,
“என்னவொரு காரணத்திற்காக நாங்கள் மதவாதத்தை எதிர்த்து திமுகவோடு நின்றோமோ, அந்த பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சியை என்னைக்கு திமுக கையில் எடுத்ததோ, அன்னைக்கே திமுக கூட்டணியில் இருந்த அத்தனை இயக்கங்களும் இனி இவர்களுடன் தொடர முடியாது என்பதை உணர்ந்து கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம்” எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
தவெக-வின் மாற்று அரசியல் மற்றும் புதிய அரசு:
தற்போதைய புதிய தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் குறித்தும் அவர் பேசினார். தவெக சாதி, மத பிரிவினை இல்லாத அரசியல் மட்டுமன்றி, லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியைத் தருவதாகக் கூறி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாகவே முன்பு திமுக கூட்டணியில் இருந்த அத்தனை இயக்கங்களும் இன்று தவெக-விற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன.
நிதி மேலாண்மை சவால்:
புதிய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் லீக்கேஜ்களைத் தடுத்து, சிறப்பான நிதி மேலாண்மை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டவும், கமிஷன் மற்றும் லஞ்ச ஒழிப்பு மூலம் திட்டச் செலவுகளில் 20 முதல் 30 விழுக்காடு வரை குறைக்கவும் புதிய அரசு முயலும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!
நவோதயா பள்ளிகள் விவகாரம்:
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வராமல் இருப்பதற்கு முந்தைய திமுக அரசின் இருமொழிக் கொள்கையே காரணம் என்று குறிப்பிட்ட துரை வைகோ, இந்தியா முழுவதும் இப்பள்ளிகள் இயங்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் செயல்படுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், இது குறித்துத் தமிழக அரசு இன்னும் சில வாரங்களில் பதிலளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.