பழனி கோயில் நில மோசடி வழக்கு.. சார் பதிவாளர் அலுவலக கதவுகளைப் பூட்டி சிபிசிஐடி விசாரணை!!
Palani temple land scam CBCID raid: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நில மோசடி வழக்கில், சிபிசிஐடி எஸ்பி சஜிதா தலைமையிலான தனிப்படையினர் பழனி சார் பதிவாளர் அலுவலகக் கதவுகளைப் பூட்டி அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் வீடுகளிலும் ரெய்டு தீவிரமடைந்துள்ளது.
பழனி, ஜூலை 18: திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, விசாரணை அண்மையில் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், தற்போது இந்த விவகாரத்தில் தங்களின் அதிரடி வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். திண்டுக்கல், பழனி, மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இன்று மூன்றாவது நாளாகச் சோதனைகளும், நேரடி விசாரணைகளும் நீடித்து வருகின்றன.
இதையும் படிக்க: தவெக-விற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. கரூரை மீட்டெடுக்க இபிஎஸ் வியூகம்.. புதிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!
அலுவலகக் கதவுகளைப் பூட்டி விசாரணை:
இன்று மதிய நிலவரப்படி, பழனி சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சிபிசிஐடி எஸ்பி சஜிதா தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் திடீரென அதிரடியாக நுழைந்தனர். அதிகாரிகள் உள்ளே நுழைந்த அடுத்த கணமே, வெளிநபர்கள் அல்லது இடைத்தரகர்கள் யாரும் உள்ளே வராதவாறும், உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாதவாறும் அலுவலகத்தின் அனைத்துப் பிரதான கதவுகளும் அதிரடியாகப் பூட்டப்பட்டன.
ஒரே இடத்தில் அமரவைத்து விசாரணை:
அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர், ஆவண எழுத்தர்கள், கணினிப் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரையும் ஒரே இடத்தில் திரட்டி அமர வைத்த எஸ்பி சஜிதா, இந்த 100 கோடி நிலப் பத்திரப்பதிவு எப்படி அரங்கேறியது என்பது குறித்துத் தனித்தனியாக நேரடியாக விசாரணையைத் தொடங்கினார். சர்ச்சைக்கிற்குரிய இந்த நிலப் பதிவிற்காகக் கையாளப்பட்ட முக்கியப் பத்திரக் கோப்புகள், ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றிய அதிகாரிகள், அலுவலகக் கணினிகளில் இருந்த தரவுகளையும் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சார்பதிவாளர் மற்றும் நண்பர் வீடுகளில் ரெய்டு:
முன்னதாக இன்று அதிகாலை முதலே, இந்த மோசடிப் பதிவுக்குத் துணை நின்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் என்பவரது திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். இந்தச் சோதனை தற்போதும் நீடித்து வருகிறது. அதே வேளையில், சார்பதிவாளர் ஜஸ்டினின் நெருங்கிய நண்பரும், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தருமான ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டிலும் சிபிசிஐடி ஆய்வாளர் சேகர் தலைமையிலான தனிப்படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு, சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: பழனி முருகன் கோயில் நில முறைகேடு.. அதிரடி விசாரணைக்கு 3 பேர் கொண்ட குழு அமைப்பு!
போலிப் பத்திரம் வாங்கியவர்கள் மற்றும் சாட்சிகள்:
இந்த 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மோசடியாகத் தங்களது பெயருக்கு எழுதி வாங்கிய நபர்கள் யார், அதற்குப் பின்னணியில் இருந்த அரசியல் புள்ளிகள் யார் என்ற விவரங்களைச் சிபிசிஐடி திரட்டியுள்ளது. மேலும், இந்த மோசடிப் பத்திரப்பதிவின் போது அதற்குச் சாட்சிக் கையெழுத்து போட்டவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்த சில தினங்களில் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் நில மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.