திமுக எம்.பி.க்கள் கூட்டம்: நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? என முடிவு
DMK Resolves: திமுக கூட்டத்தில், மத்திய அரசின் நிதி மற்றும் மொழித் திணிப்புகளை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டுக்கான உரிமைகள் – நிதி, கல்வி, மொழி – ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் ஒருமித்த குரலாக உரிமைகளை எழுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஜூலை 18: கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டும் திராவிட முன்னேற்ற கழகம், அதன் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி, தமிழ்நாட்டுக்கான கல்வி, நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (ஜூலை 18, 2025) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக உரிமைகளுக்காக ஓங்கும் நாடாளுமன்றக் குரல்
ஜனநாயக உரிமைகளுக்காகவும், மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தி.மு.க., தேசிய அரசியலில் ஒரு முக்கியமான இயக்கமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போதும், தமிழ்நாட்டு மக்களின் குரலாகத் தி.மு.க.வின் எம்.பி.க்களின் குரல் ஒலிக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டின் பிரச்சினைகளை மட்டுமின்றி, நாட்டின் மிக முக்கியப் பிரச்சினைகளையும் எழுப்ப இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட உள்ள முக்கியப் பிரச்சினைகள்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்ப உள்ள முக்கியக் கோரிக்கைகளும், பிரச்சினைகளும் பின்வருமாறு:




நிதி ஆயோக் கூட்ட வலியுறுத்தல்கள்: மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த மே 24, 2025 அன்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்திய “காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம்” குறித்தும், “ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு அனைவருக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுதல்” குறித்தும் பேசப்படும்.
Also Read: சாதி ரீதியில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு… சென்னை ஐகோர்ட் உத்தரவு!
நிதியநீதி மற்றும் மொழித் திணிப்பு: “மும்மொழிக் கொள்கையைத் திணித்து, பின்னர் மகாராஷ்டிரா மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பின்வாங்கினாலும், அது பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதால் S.S.A. நிதியை அளித்து, தமிழ்நாட்டுக்கு S.S.A. நிதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மறுப்பது” குறித்துக் கண்டனம் தெரிவிக்கப்படும்.
மாநில நிதிப் பங்கீடு: “ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரிப் பகிர்வு” குறித்தும், “15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 விழுக்காடு வரி வருவாய் பங்கிற்குப் பதிலாக 33.16 விழுக்காடு பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் நிதி அநீதி” குறித்தும், “ஒன்றிய அரசும் – மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி” குறித்தும் அழுத்தம் கொடுக்கப்படும்.
தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் விவகாரங்கள்: தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து ஒன்றிய அரசு மௌனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய இரயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது, மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது ஆகியவற்றை எதிர்த்து உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கும்.
Also Read: பனை மரத்தின் மரபணு ரகசியங்கள் என்ன? கண்டறிந்து டாக்டர் பட்டம் பெற்ற நெல்லை மாணவர்
தேசிய மற்றும் மாநிலப் பிரச்சினைகள்: ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கொடுக்காமல் தட்டிக்கழிப்பது, வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கோடிக்கணக்கானவர்களின் வாக்குரிமையைப் பறிப்பது, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது, ஏழை – எளிய மக்களைப் பாதிக்கும் இரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும்.
தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமை உள்ளிட்ட அனைத்திற்காகவும் வருகின்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள், கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுதியாகவும் ஒருங்கிணைந்தும் குரல் எழுப்புவார்கள் என்று இக்கூட்டம் தீர்மானித்துள்ளது.