Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் கொட்டும் மழை.. பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

Tamil Nadu Rain Alert: சென்னையில் அதிகாலை முதல் தற்போது வரை நல்ல மழை பதிவாகி வருகிறது. இதனால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் பல சாலைகளிலும் தண்ணீர் தேங்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கொட்டும் மழை.. பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Nov 2025 10:33 AM IST

வானிலை நிலவரம் – நவம்பர் 13, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து, வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவியது. ஆனால் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

நெல்லையில் பதிவான 9 செ.மீ மழை:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்) பகுதியில் 9 செ.மீ., நாலுமூக்கு (திருநெல்வேலி மாவட்டம்), காக்காச்சி (திருநெல்வேலி மாவட்டம்), மாஞ்சோலை (திருநெல்வேலி மாவட்டம்) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., ஒட்டபிடாரம் (தூத்துக்குடி மாவட்டம்) 6 செ.மீ., அடவிநயினார்கோயில் அணை (தென்காசி மாவட்டம்), ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம்), மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: ‘5 மாதங்களில் நீங்கள் எம்எல்ஏ, அமைச்சராக போகிறீர்கள்’.. பரபரப்பை கிளப்பிய அன்புமணி!

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், நவம்பர் 13, 2025 தேதியான இன்று சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரவிருக்கும் நவம்பர் 17, 2025 அன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை ஒன் செயலி.. ஒரு ரூபாய் செலுத்தி டிக்கெட் பெரும் புதிய சலுகை.. இன்று முதல் அறிமுகம்..

சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை:

சென்னையில் அதிகாலை முதல் தற்போது வரை நல்ல மழை பதிவாகி வருகிறது. இதனால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் பல சாலைகளிலும் தண்ணீர் தேங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பிற்பகல் ஒரு மணி வரை மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, நவம்பர் 17 அல்லது 18 ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்கள் முதல் கடலோர மாவட்டங்கள் வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். அதேபோல், நவம்பர் மாத இறுதியில் ஒரு புயல் உருவாகக்கூடும் எனவும் கணித்துள்ளார் என தெரிவித்தார்.