சென்னை பெரம்பூரில் அதிர்ச்சி.. ATM பண வாகனத்தில் பெட்டி மாயம்.. பணத்துடன் தப்பிய கும்பலுக்கு போலீசார் வலை!!
Chennai Perambur ATM Cash Robbery: சென்னையில் ஏடிஎம் மையங்களுக்குப் பணம் நிரப்பச் சென்ற வாகனத்தில் இருந்து ரூ. 24 லட்சம் ரொக்கம் இருந்த ஒரு பணப்பெட்டி மாயமாகியுள்ளது. முரசொலி மாறன் மேம்பாலத்தில் 2 காலிப் பெட்டிகள் மீட்கப்பட்ட நிலையில், தப்பியோடிய நபரையும் மாயமான பணப் பெட்டியையும் ஐசிஎஃப் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை, ஆகஸ்ட் 15: சென்னை பெரம்பூர் பகுதியில் ஏடிஎம் மையங்களுக்குப் பணம் நிரப்பச் சென்ற தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்து ரூ. 24 லட்சம் ரொக்கம் அடங்கிய பணப்பெட்டி திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியைச் சேர்ந்த எச்டிஎப்சி வங்கிக்கான ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பணத்தை நிரப்பிக் கொண்டு செல்லும்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த கொளத்தூர் துணை ஆணையர் மற்றும் ஐசிஎஃப் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: சௌமியா அன்புமணியின் தந்தைக்கு உயரிய ‘தகைசால் தமிழர்’ விருது.. மேடையில் கௌரவித்த முதல்வர் விஜய்!!
ரூ. 4.69 கோடியுடன் புறப்பட்ட வாகனம்:
சென்னையின் வேளச்சேரி பகுதியில் இயங்கி வரும் ‘கேஷ் செக்யூர் சிஸ்டம்’ என்ற ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள், பல்வேறு ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 105 பணப்பெட்டிகளில் மொத்தம் ரூ. 4 கோடியே 69 லட்சம் ரொக்கப் பணத்தை வாகனத்தில் எடுத்துக்கொண்டு வேளச்சேரி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். நகரின் 14 ஏடிஎம் மையங்களில் வெற்றிகரமாகப் பணத்தை நிரப்பிய ஊழியர்கள், 15-வதாகப் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்குப் பணத்தை நிரப்ப வந்தபோதுதான் வாகனத்தில் 3 பணப்பெட்டிகள் குறைவாக இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
மேம்பாலத்தின் மீது கிடந்த காலிப் பெட்டிகள்:
வாகனத்தில் பெட்டிகள் குறைந்ததைக் கண்டு திடுக்கிட்ட ஊழியர்கள், தாங்கள் வந்த பாதையிலேயே உடனடியாகத் திரும்பிச் சென்று தேடிப் பார்த்தனர். அப்போது முரசொலி மாறன் மேம்பாலத்தின் மீது இரண்டு பணப்பெட்டிகள் காலியாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், சுமார் ரூ. 24 லட்சம் ரொக்கம் இருந்த மற்றொரு பணப்பெட்டி முற்றிலும் மாயமாகியிருந்தது தெரியவந்தது. உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஊழியர்கள் தகவல் தெரிவிக்க, கொளத்தூர் காவல் துணை ஆணையர் மற்றும் ஐசிஎஃப் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கள ஆய்வில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: கோவை மாநகராட்சியில் 54 அரசு ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்.. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
காவல் துறை தீவிர விசாரணை:
சம்பவம் நடைபெற்ற முரசொலி மாறன் மேம்பாலப் பகுதியில் நேரடியாகச் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், அதன் அருகிலுள்ள பிற பகுதிகளில் அமைந்துள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஓடும் வாகனத்திலிருந்து பணப்பெட்டி தவறி விழுந்ததா, அதை யாரேனும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றார்களா அல்லது திட்டமிட்டுப் பணம் திருடப்பட்டுள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் ஐசிஎஃப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.