4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி? வானிலை ரிப்போர்ட் இதோ..
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், ஜனவரி 23, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும், அதே சமயத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 23 ஜனவரி 2026 தேதியான இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் – எந்தெந்த வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
24 ஜனவரி நாளை, கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்திலும் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வரக்கூடிய 25ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகக் கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 28ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து குறையக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விசில் போடுவோம்…. மகத்தான வெற்றி பெறுவோம் – தவெக தலைவர் விஜய் மகிழ்ச்சி
கொடைக்கானல் நீலகிரியில் தொடரும் உறைபனி:
அதே சமயத்தில், நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் உறைபனி தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் 33.2 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரையில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 30.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், கடந்த 24 மணி நேரத்தில் தர்மபுரியில் 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கொடைக்கானலில் இரவு நேர வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.