Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குன்னூரில் பதிவான 26 செ.மீ மழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

Tamil Nadu Weather Update: ஜனவரி 2, 2026 அன்று கோவை, தேனி, தென்காசி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவானது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 26 சென்டிமீட்டர், தென்காசி மாவட்டம் கடனா அணை பகுதியில் 24 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

குன்னூரில் பதிவான 26 செ.மீ மழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Jan 2026 06:15 AM IST

வானிலை நிலவரம், ஜனவரி 3, 2026: இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், ஜனவரி 1, 2026 நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பதிவானது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 2, 2026 அன்று கோவை, தேனி, தென்காசி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவானது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 26 சென்டிமீட்டர், தென்காசி மாவட்டம் கடனா அணை பகுதியில் 24 சென்டிமீட்டர், தென்காசி சிவகிரியில் 17 சென்டிமீட்டர் மற்றும் தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:

இந்த சூழலில், ஜனவரி 3, 2026 தேதியான இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பில் ஈடுபட்டபோது வெடி விபத்து – 2 வட மாநில தொழிலாளர்கள் பலி

அதேபோல், ஜனவரி 4 மற்றும் ஜனவரி 5 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை மட்டுமே நிலவக்கூடும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 டிகிரி வரை குறையும் வெப்பநிலை:

அதனைத் தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 8ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறைந்து பதிவாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.