பராமரிப்பு பணிகளில் மாற்றம்.. மின்சார ரயில்கள் ரத்தில் முக்கிய மாற்றம்!
Electric Trains Will Run As Usual In Chennai | சென்னையில் ஏராளமான மின்சார ரயில்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ளன. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சில ரயில்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 12 : சென்னையில் (Chennai) தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 12, 2026) கடற்கரை – தாம்பரம் (Beach – Tambaram) இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சில குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் வழக்கம் போல ரயில்கள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பராமரிப்பு பணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றம்
இன்று (ஜூலை 12, 2026) காலை மேற்கொள்ளப்பட இருந்த ரயில்வே பராமரிப்பு பணி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரயில்களில் 8 ரயில்கள் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
- சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி, மாலை 3.15 மணி, மாலை 3.45 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில்கள்.
- செங்கல்பட்டுக்கு காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில். இதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.30 மணி, மதியம் 2.25 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள்.
- தாம்பரத்தில் இருந்து காலை 10.45 மணி, மாலை 3.30 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள்.
மேற்குறிப்பிட்ட இந்த ரயில்களில் எந்தவித மாற்றமுமின்றி அவை வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க : தமிழக அரசு கல்லூரிகளில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
சென்னை மக்களின் பிரதான போக்குவரத்தாக உள்ள ரயில்கள்
சென்னை மக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக மின்சார ரயில்கள் உள்ளன. நகரத்தில் போக்குவரத்து நெரிசலில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவே சில நேரம் தேவைப்படுவதன் காரணமாக, எந்தவித போக்குவரத்து நெரிசல் சிக்கல்களும் இல்லாமல் விரைவாக பயணம் செய்ய பலரும் இந்த மின்சார ரயில் போக்குவரத்தை தான் தேர்வு செய்கின்றனர்.
இதையும் படிங்க : போர்வெல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் மரணம் – அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து பாதிக்கும் சூழல் இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.