“இனி வாரத்தில் இரு நாட்கள்…” தமிழக காவல் துறையினருக்கு டிஜிபி அதிரடி உத்தரவு!
பொதுவாகக் காவல் துறை அதிகாரிகள் வழக்கு விசாரணை, நீதிமன்றப் பணிகள், அலுவல் சார்ந்த கூட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணிகள் ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தங்களின் குறைகளைக் கூற வரும் பொதுமக்கள் அதிகாரிகளைச் சந்திக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
சென்னை, ஜுன் 24: தமிழகம் முழுவதும் காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் தேங்கிக் கிடக்கும் பொதுமக்கள் புகார் மனுக்களுக்கு விரைவாகவும் திறம்படவும் தீர்வு காணும் நோக்கில், இனி வாரத்தில் இரண்டு நாட்கள் ‘பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்’ கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழகக் காவல் துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். டிஜிபியின் புதிய வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ‘பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளாகக்’ கடைப்பிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை (தொடர்ந்து இரண்டு மணி நேரம்) அனைத்து நிலை காவல் அதிகாரிகளும் தங்களின் அலுவலகங்களில் தங்கிப் பொதுமக்களை நேரில் சந்திக்க வேண்டும்.
மேலும் படிக்க: பவர் ஷேரிங் கொடுத்த தவெக ஆட்சியில் பவர் இல்லை.. உதயநிதி பேச்சால் சிரிப்பலை!
அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் கட்டுப்பாடு:
இந்தக் குறைதீர்ப்பு முகாமில், அடிமட்டக் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகள் (ஆய்வாளர்கள்) தொடங்கி, காவல் துணை கண்காணிப்பாளர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், டிஐஜி, ஐஜி மற்றும் மாநகரக் காவல் ஆணையர்கள் வரை அனைவரும் தத்தமது அலுவலகங்களில் நேரடியாக இருக்க வேண்டும். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளைக் கண்ணியமான முறையில் கேட்டறிந்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின் பின்னணி:
பொதுவாகக் காவல் துறை அதிகாரிகள் வழக்கு விசாரணை, நீதிமன்றப் பணிகள், அலுவல் சார்ந்த கூட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணிகள் ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தங்களின் குறைகளைக் கூற வரும் பொதுமக்கள் அதிகாரிகளைச் சந்திக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்தத் தவிப்பைத் தவிர்த்து, பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டவட்டமான நேர ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவசரப் பணிகளுக்கான மாற்று ஏற்பாடு:
ஏதேனும் மிக அவசரமான சட்டம்-ஒழுங்கு பணி அல்லது தவிர்க்க முடியாத முக்கியக் கூட்டங்கள் காரணமாகப் பொறுப்பு அதிகாரி முகாமில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டால், முகாமினை ரத்து செய்யக் கூடாது. அதற்குப் பதிலாகத் தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள தகுதியான அதிகாரியை நியமித்து, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: தவெக ஆட்சியிலும் ஹிந்துக்கள் மீதான விரோதம் தொடர்கிறது.. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!
தலைமை அலுவலகக் கண்காணிப்பு:
இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன, குறிப்பிட்ட நேரத்தில் அதிகாரிகள் முகாமில் பங்கேற்கிறார்களா, மற்றும் பொதுமக்களின் மனுக்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது போன்ற அனைத்து விவரங்களும் சென்னையில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தால் வாரந்தோறும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தனது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.