சென்னை அண்ணா பல்கலை. மாணவர் உண்ணி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு.. அலட்சியம் வேண்டாம்.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை!!
Anna University Student dies: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர் ஹரீஷ் குமார் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி கண்டதும் உடனடி சிகிச்சை பெற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, செப்.19: தமிழகத்தில், குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு வகையான காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமாகப் பரவி வருகின்றன. பருவநிலை மாற்றம் மற்றும் வரவிருக்கும் பருவமழைக்கால முன்னெச்சரிக்கைகள் நிலவும் இச்சூழலில், வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் ‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் உண்ணிக் காய்ச்சல் ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கிப் பயின்று வந்த இறுதியாண்டு மாணவர் ஒருவர் உண்ணி காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கனுமா…? ரேஷன் கடை ஊழியரின் அடவடி பேசிய வீடியோ வைரல்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவர் ஹரீஷ் குமார்:
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஹரீஷ் குமார் (21), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவருக்குக் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாகக் கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சுகாதார மையத்தில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டு வந்த நிலையில், காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து கிண்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உண்ணி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த போதிலும், காய்ச்சலின் தீவிரத்தால் நுரையீரல் பகுதி முழுமையாகப் பாதிக்கப்பட்டதால் மாணவர் ஹரீஷ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் அதிகரிக்கும் பாதிப்புகள்:
அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கிப் படிக்கும் மேலும் பல மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரீஷ் குமாருடன் படித்த ஆனந்த் ராஜ் என்ற மாணவருக்கும் தீவிர காய்ச்சல் ஏற்பட்டு, கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, கடந்த சில நாட்களில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் சில மாணவிகளுக்கும் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பெற்றோர், பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் வளாகப் பகுதிகளைச் சுற்றிக் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உருவாகாத வண்ணம் உடனடியாகக் கிருமிநாசினி தெளித்துத் தீவிர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க : காமராஜர் காலை உணவு திட்டம் 2.0.. முதல்வர் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்.. ஆக்சனில் இறங்கிய ஜோசப் விஜய்!
சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்:
மாணவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கான அவசர முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களைத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் பரவி வரும் நிலையில், யாருக்கேனும் காய்ச்சல், தலைவலி, தசை வலி அல்லது உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவம் செய்து கொள்வதையோ அல்லது மருத்துவக் கலந்தாய்வின்றி மாத்திரைகள் சாப்பிடுவதையோ முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனேயே அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளை அணுகி, உரிய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே நோயின் தன்மையைக் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உயிராபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.