மின் கட்டணம் தொடர்பாக சின்னத்திரை நடிகையின் பரபரப்பு புகார்.. மின்வாரியம் தொடர்பு கொண்டும் விவரங்கள் பகிர மறுப்பு..
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரியக் குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13, 2026: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை வைஷாலி, தமிழக வெற்றிக் கழக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மின் கட்டணம் சரமாரியாக உயர்ந்துள்ளதாகவும், முதலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக வருத்தப்படுவதாகவும் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலான நிலையில், நடிகை வைஷாலியின் புகார் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மின் கட்டணம் – வேதனையில் பொதுமக்கள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை மின் கட்டணம் வந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில், நடிகை வைஷாலி வெளியிட்ட காணொளி பரவலான கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மின் விவரங்களை பகிர மறுத்த நடிகை?
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத்… https://t.co/rKiD5hmt0U
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) August 12, 2026
அதில், “இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரியக் குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பலமுறை மின்வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை. புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரியப் பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம் என மின்வாரியம் கோரிக்கை:
“எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், “உண்மை நிலவரத்தை முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.