“10 வருஷமா போராடுறேன்…” முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார்!!
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரத்திற்காகப் போராடி வருவதாகத் தெரிவித்த சாந்தினி, ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் மருதுபாண்டி என்பவரை விலைக்கு வாங்கி வழக்கை முடக்க முயன்றதாகவும், இதுவரை தனக்காக வாதாடிய 8 வழக்கறிஞர்களை முன்னாள் அமைச்சர் விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
சென்னை, ஜுன் 24: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தனக்கு சொத்து வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகவும், தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதால் மட்டுமே வழக்கை வாபஸ் பெற்றதாகவும் திரைப்பட நடிகை சாந்தினி பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து ஆடியோ ஆதாரங்களையும் மாநில மகளிர் ஆணையத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆட்கள் தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக சாந்தினி தெரிவித்தார்.
மேலும் படிக்க: முதல்வரின் தனி செயலர் நியமனத்தில் வெடித்த சர்ச்சை.. தவெக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை.. அரசாணையில் குறிப்பிடப்பட்ட வார்த்தை!
மிரட்டலால் வாபஸ் பெறப்பட்ட வழக்கு:
இதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராமநாதன் என்பவர் மூலமாகத் தன்னைத் தொடர்பு கொண்ட மணிகண்டன், தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கப் போவதாகவும், எனவே வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் டி.நகரில் உள்ள கவுன்சிலர் அலுவலகத்தில் தன்னை நேரில் சந்தித்த மணிகண்டன், தனது செயல்களுக்கு மன்னிப்பு கோரியதுடன், சாந்தினியின் வாழ்வாதாரத்திற்குத் தேவையானதைச் செய்து தருவதாக உறுதியளித்தார். வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதியும், மிரட்டல்களுக்குப் பயந்தும் மட்டுமே தான் வழக்கை வாபஸ் பெற்றதாக சாந்தினி விளக்கமளித்துள்ளார்.
வாக்குறுதியை மீறி ஏமாற்றம்:
முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தன்னால் பணமாகத் தர முடியாது என்றும், அதற்குப் பதிலாகத் தனது சொத்துக்களை எழுதித் தருவதாகவும் மணிகண்டன் உறுதியளித்திருந்தார். ஆனால், வழக்கை வாபஸ் பெற்ற இரண்டாவது நாளிலிருந்தே தனது அனைத்து தொலைபேசி எண்களையும் அவர் அணைத்து வைத்துவிட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் நடிகை சாந்தினி குற்றம்சாட்டியுள்ளார். வழக்கறிஞர் நோட்டீஸ் மற்றும் தனிப்பட்ட கடிதங்கள் அனுப்பியும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்களிடம் முறையீடு:
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை தனக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்று சாந்தினி கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரத்திற்காகப் போராடி வருவதாகத் தெரிவித்த சாந்தினி, ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் மருதுபாண்டி என்பவரை விலைக்கு வாங்கி வழக்கை முடக்க முயன்றதாகவும், இதுவரை தனக்காக வாதாடிய 8 வழக்கறிஞர்களை முன்னாள் அமைச்சர் விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
மேலும் படிக்க: தவெக ஆட்சி அமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்.. பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன் சவால்!
ஆதாரங்களுடன் மகளிர் ஆணையத்தில் ஆஜர்:
இதன் காரணமாக, இன்று வழக்கறிஞர்கள் எவருமின்றி மகளிர் ஆணையத்தில் தானே நேரில் ஆஜராகி வாதாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டியதற்கான ஆடியோ பதிவுகள், கவுன்சிலர் அலுவலகத்தில் பேசிய ஆதாரங்கள் அனைத்தையும் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மகளிர் ஆணையம் விரிவான கோப்பைத் தயாரித்து, முன்னாள் அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக நடிகை சாந்தினி தெரிவித்தார்.