AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“டீ கடையில் பணிபுரிந்தவர் பிரதமர்.. நல்ல நடிக்க தெரிஞ்ச நடிகர் முதல்வர்”.. இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.. ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் நெகிழ்ச்சி!!

அவர் பேசுகையில், "வெளிநாடுகளான துபாய் போன்ற நாடுகளுக்கோ அல்லது ரஷ்யா போன்ற தேசங்களுக்கோ சென்று நாம் நேரடியாக அரசியல் களத்தில் நின்று அங்குத் தலைவராகவோ அல்லது அதிபராகவோ மாறிவிட முடியாது. அங்கு ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே ஆட்சி என்ற அதிகார மைய நிலைதான் நடைமுறையில் உள்ளது.

“டீ கடையில் பணிபுரிந்தவர் பிரதமர்.. நல்ல நடிக்க தெரிஞ்ச நடிகர் முதல்வர்”.. இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.. ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் நெகிழ்ச்சி!!
ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Jun 2026 07:35 AM IST

சென்னை, ஜுன் 26: இந்தியாவின் ஜனநாயகச் சுதந்திரம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் அவசியம் மற்றும் தேச வளர்ச்சிக்கு எதிர்காலத் தூண்களான இளைஞர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் குறித்து, கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் ஆற்றிய உரை, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதில் அவர், உலக நாடுகளின் அரசியல் அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ஜனநாயகம் சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் வழங்கும் சமத்துவமான வாய்ப்புகளையும், அளப்பரிய சுதந்திரத்தையும் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் படிக்க: அமோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம்.. 3 பேர் குழு அதிரடி விசாரணை.. முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்!

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர முடியும்:

அவர் பேசுகையில், “வெளிநாடுகளான துபாய் போன்ற நாடுகளுக்கோ அல்லது ரஷ்யா போன்ற தேசங்களுக்கோ சென்று நாம் நேரடியாக அரசியல் களத்தில் நின்று அங்குத் தலைவராகவோ அல்லது அதிபராகவோ மாறிவிட முடியாது. அங்கு ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே ஆட்சி என்ற அதிகார மைய நிலைதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், நமது பாரத நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர முடியும், மக்கள் ஆதரவோடு என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உன்னதமான ஜனநாயகச் சுதந்திரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

பிரதமர் முதல் முதலமைச்சர் வரை உதாரணம்:

அதற்குப் பொருத்தமான பல நிஜக்கதை உதாரணங்களை அவர் பட்டியலிட்டார். மிகவும் பின்தங்கிய ஒரு மலைவாழ் மக்கள் சமூகப் பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண்மணி (திரௌபதி முர்மு), இன்று இந்திய நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து நாட்டின் முதல் குடிமகளாக விளங்குகிறார். ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, ஆரம்பக் காலத்தில் டீ கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு எளிய மனிதர் (நரேந்திர மோடி), இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார்.

திரையில் தனது திறமையால் நல்ல நடிக்கத் தெரிந்த ஒரு நடிகராக முத்திரை பதித்தவர் (விஜய்), இன்று மக்கள் செல்வாக்கோடு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இத்தகைய வியக்கத்தக்க வாய்ப்புகளையும் மாற்றங்களையும், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக சுதந்திரத்தையும் வேறு எந்த நாடும் தங்களது குடிமக்களுக்கு எளிதில் வழங்கிவிடாது; இது நம் இந்தியத் திருநாட்டிற்கு மட்டுமே உரிய தனிச்சிறப்புமிக்க பெருமையாகும் என்று தேசப்பற்றோடு அவர் குறிப்பிட்டார்.

ஊழல் ஒழிப்பும் புதிய அரசு மீதான நம்பிக்கையும்:

தொடர்ந்து நாட்டின் உள்நாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், தேசத்தின் முன்னேற்றத்திற்காக இளைஞர்கள் அனைவரும் தங்களது சுயநலத்தைத் தாண்டி சிந்திக்க வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். “இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தேசப்பணியாற்றுவதில் அதிக ஆர்வம் இருக்கிறது. நீங்கள் படித்து முடித்துவிட்டு ராணுவத்திற்குத் தான் வர வேண்டும் என்பதில்லை; காவல் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை எனப் பல்வேறு அரசுப் பணிகளுக்குச் சென்றாலும், நீங்கள் கால் பதிக்கும் எந்தத் துறையாக இருந்தாலும் அங்கு முதல் கடமையாக நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். நமது நாட்டில் தகுதியும் திறமையும் வாய்ந்த எத்தனையோ இளைஞர்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் முடக்கப்படுவதற்கு லஞ்சம், ஊழல், கமிஷன் மற்றும் முறைகேடுகள்தான் மிக முக்கியக் காரணமாக இருக்கின்றன. இதனை நாம் வேரோடு ஒழிக்கப் பாடுபட வேண்டும்” என்று முழங்கினார்.

மேலும், தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில், “தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த இளம் ஆட்சியில் (முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு), பல புதிய இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த இளைய தலைமுறையினர் லஞ்ச ஊழலை ஒழித்து, மக்களுக்குச் சாதகமான நல்லதொரு நிர்வாக மாற்றத்தைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை ஓரளவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஆட்சி வரும் காலங்களில் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மாணவர்களுக்கு விடுத்த இறுதி வேண்டுகோள்:

கல்லூரி பேராசிரியர்களும் கல்வி நிறுவன நிர்வாகத்தினரும் மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை நல்வழிப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் எல்லாவிதமான உதவிகளையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் இந்த பொன்னான வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க: பெரம்பூர் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய்.. நடத்துநருடன் கலந்துரையாடி ஆய்வு!

ஒவ்வொரு மாணவரும் தங்களது வாழ்நாளில் ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைத்து, தாங்கள் பயின்ற கல்லூரிக்கும், பிறந்த சொந்த ஊருக்கும், தாங்கள் வாழும் தமிழ்நாட்டிற்கும் மற்றும் ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் ஆற்றிய உத்வேக உரை, அங்கு கூடிருந்த ஒட்டுமொத்த மாணவச் செல்வங்களையும் நெகிழச் செய்து, அரங்கம் அதிரும் கைதட்டல்களைப் பெற்றது.

Follow Us