வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. விடிவதற்குள் நடந்த மர்மம்.. கிணற்றில் மிதந்த சடலம்..
இதற்கிடையில் தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு, வீட்டின் அருகாமையில் உள்ள வீடுகளின் கிணறுகளில் சோதனை நடத்தினர். அப்போது, சிறுமியின் வீட்டின் மிக அருகாமையில் உள்ள பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் சிறுமி பிணமாக மிதப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி சிறுமியின் உடலை மீட்டனர்.
ராமநாதபுரம், ஜுன் 28: ராமநாதபுரம் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மாயமாகி, பின்னர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு வயதான சிறுமி ஒருவர், ராமநாதபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல சிறுமி தனது பாட்டியுடன் வீட்டின் வெளித் திண்ணையில் படுத்து உறங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ‘ஸ்கெட்ச்’ போட்ட போலீசார்.. தப்பியோட முயன்ற ரவுடி.. பாய்ந்தது துப்பாக்கி குண்டு.. சென்னையில் பரபரப்பு!!
அதிகாலையில் நேர்ந்த அதிர்ச்சி:
தொடர்ந்து, இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் பாட்டி எழுந்து பார்த்தபோது, அருகில் படுத்திருந்த பேத்தியைக் காணவில்லை. இதனால் பதறியடித்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாகத் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததைத் தொடர்ந்து, உடனடியாக ராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிரடிப்படை மற்றும் மோப்பநாய் உதவி:
சிறுமி மாயமான செய்தி கிடைத்ததும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுமியைத் தேடுவதற்காகப் போலீஸ் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் அந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் மற்றும் புதர்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் அக்குவேறு ஆணிவேறாகத் துருவித் துருவித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கிணற்றில் மிதந்த சடலம்:
இதற்கிடையில் தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு, வீட்டின் அருகாமையில் உள்ள வீடுகளின் கிணறுகளில் சோதனை நடத்தினர். அப்போது, சிறுமியின் வீட்டின் மிக அருகாமையில் உள்ள பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் சிறுமி பிணமாக மிதப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
பெற்றோரின் கதறல் – போலீஸ் விசாரணை தீவிரம்:
மகள் சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டு அவளது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது பார்ப்போரை நெஞ்சம் உருகச் செய்தது. பாதுகாப்பாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் எப்படி கிணற்றுப் பகுதிக்குச் சென்றார்? என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: யார் இந்த பி.டி. அரசகுமார்? நர்சரி ஸ்கூலில் தொடங்கி ரூ.100 கோடி மோசடி வரை.. திடுக்கிடும் பின்னணி!
இது எதிர்பாராமல் நடந்த தற்செயலான விபத்தா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் சிறுமிக்குத் தீங்கு விளைவித்துவிட்டு, ஆதாரங்களை மறைப்பதற்காகக் கிணற்றில் தூக்கி வீசிச் சென்றார்களா? என்ற கோணத்தில் தடையவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் அந்தப் பகுதி முழுவதும் தடயங்களைச் சேகரித்து, விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் ராமநாதபுரம் பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் நிலவி வருகிறது.