T20 World Cup 2026: ‘சூப்பர் 8’ விதிமுறை.. ICC-க்கு குவியும் கண்டனங்கள்.. காரணம் என்ன?
T20 World Cup 2026: லீக் சுற்றில் தோல்வியே அடையாத நான்கு சிறந்த அணிகளில் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்பே கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம், இரண்டாம் இடம் பிடித்த அணிகள் உள்ள பிரிவில் இருந்து தகுதியற்ற ஒரு அணி அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பையின்(2026 T20 World Cup) ‘சூப்பர் 8‘ (Super 8) சுற்றுக்கான விதிமுறைகள் மற்றும் அணிகள் பிரிக்கப்பட்ட விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளின் பெயர்கள் முடிவான நிலையில், ஐசிசி பயன்படுத்திய ‘முன்-தரவரிசை’ (Pre-seeding) முறையினால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. இதன் விளைவாக, லீக் சுற்றில் வெற்றி பெற்ற நான்கு குழு வெற்றியாளர்களும் ஒரே சூப்பர் 8 பிரிவில் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம் இரண்டாம் இடம் பிடித்த நான்கு அணிகளும் மற்றொரு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..
அதாவது, தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே சில அணிகள் எந்த இடத்தைப் பிடித்தாலும் அவர்கள் குறிப்பிட்ட பிரிவில்தான் இருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக, லீக் சுற்றில் தத்தமது பிரிவுகளில் முதலிடம் பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகளும் ஒரே பிரிவில் (குரூப் 1) இடம் பெற்றுள்ளன.
மறுபுறம், இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மற்றொரு பிரிவில் (குரூப் 2) உள்ளன.
திறமைக்குக் கிடைக்காத அங்கீகாரம்:
வழக்கமாக ஒரு தொடரில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு, அடுத்த சுற்றில் சற்று சுலபமான அணிகளுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்த முறையில் லீக் சுற்றில் அபாரமாக விளையாடி முதலிடம் பிடித்த அணிகள், மற்ற வலிமையான வெற்றியாளர்களுடன் மோத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
‘சூப்பர் 8’ பிரிவு மாறாது:
அணிகள் லீக் சுற்றில் எத்தனையாவது இடத்தைப் பிடித்தாலும் அவர்களின் ‘சூப்பர் 8’ பிரிவு மாறாது என்பதால், லீக் சுற்றின் கடைசிப் போட்டிகள் விறுவிறுப்பு இல்லாமல் போனதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் தோற்றிருந்தாலும் ‘சூப்பர் 8’ பிரிவில் மாற்றம் ஏற்பட்டிருக்காது. இது விளையாட்டின் சுவாரசியத்தைக் குறைப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
அரையிறுதி வாய்ப்பு பறிபோதல்:
லீக் சுற்றில் தோல்வியே அடையாத நான்கு சிறந்த அணிகளில் (இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே), இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்பே கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம், இரண்டாம் இடம் பிடித்த அணிகள் உள்ள பிரிவில் இருந்து தகுதியற்ற ஒரு அணி அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக மீண்டும் மோதுமா?.. இதோ முழு விவரம்!!
லாஜிஸ்டிக்ஸ் காரணங்கள்:
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துவதால், பயணத் திட்டங்களை எளிதாக்கவே இந்த முன்-தரவரிசை முறையை ஐசிசி கொண்டு வந்தது. ஆனால், விளையாட்டு ரீதியாக இது அநீதியானது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் சாடுகின்றனர். ஐசிசியின் இந்த வினோதமான விதிமுறை, தகுதியான அணிகளைத் தண்டிப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக முன்னேறும் அணிகளுக்குச் சாதகமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.