Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TNPL 2025: சேவாக் அவதாரம் எடுத்த அஸ்வின்.. தோனியாக மாறிய வருண்.. சேலத்தை சம்பவம் செய்து வெற்றி!

Ravichandran Ashwin: டிஎன்பிஎல் 2025ல் ஜூன் 22 அன்று நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளுடன் அசத்தினார். அஸ்வின் 36 ரன்களுடனும் அற்புதமான பேட்டிங் செய்தார். கடைசி ஓவரில் வருண் சக்கரவர்த்தி இரண்டு சிக்ஸர்கள் அடித்து திண்டுக்கல் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். திண்டுக்கல் தற்போது புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

TNPL 2025: சேவாக் அவதாரம் எடுத்த அஸ்வின்.. தோனியாக மாறிய வருண்.. சேலத்தை சம்பவம் செய்து வெற்றி!
ரவிச்சந்திரன் அஸ்வின் - வருண் சக்கரவர்த்திImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 23 Jun 2025 11:13 AM

டிஎன்பிஎல் (TNPL 2025) லீக்கில் நேற்று அதாவது 2025 ஜூன் 22ம் தேதி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons) அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். 2025 ஜூன் 22ம் தேதியான நேற்று சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான முதலில் பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி, பேட்டிங்கிலும் அதிரடியை காட்டினார்.அதே நேரத்தில், வருண் சக்ரவர்த்தி கடைசி நேரத்தில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து திண்டுக்கல் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

அசத்திய அஸ்வின்:

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக, முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுக்கு 187 ரன்கள் எடுத்தது.  சேலம் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 74 ரன்கள் எடுத்து தனது அணிக்காக அதிகபட்சமாக ஸ்கோர் செய்து, ஓரளவு நல்ல ஸ்கோரை எடுக்க உதவி செய்தார்.

பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய அஸ்வின்:

188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு புயல் மற்றும் அற்புதமான தொடக்கம் கிடைத்தது. கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் வழக்கம்போல் இன்னிங்ஸைத் தொடங்கி முதல் பந்திலேயே ஆக்ரோஷமான மனநிலையில் இருந்தார். வெறும் 14 பந்துகளில் ரவிச்சந்திரன் அஸ்வின், 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 36 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான சிவம் சிங்குடன் சேர்ந்து, அஸ்வின் சில ஓவர்களில் 57 ரன்கள் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அஸ்வினின் பேட்டிங்கைப் பார்க்கும்போது, ​​வீரேந்தர் சேவாக் கிரீஸில் நிற்பது போலவும், அவரது பேட்டிங் போலவும் காட்சியளித்தது.

தோனியாக மாறிய வருண் சக்ரவர்த்தி:

அஸ்வின் அவுட்டான பிறகு, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றி தள்ளிப்போக தொடங்கியது.  சேலம் அணி மீண்டும் வெற்றிக்கு அருகில் நெருங்கி கடைசி ஓவர் வரை இழுத்து சென்றது. அதாவது, திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெற கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் பேட்டிங் ஆடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி, தோனி பாணியில் அடுத்த இரண்டு பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடித்து போட்டியை முடித்து தனது அணிக்கு ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுத் தந்தார். இந்தப் போட்டி கடைசி வரை பரபரப்பை கொடுத்தது.

2025 டிஎன்பிஎல் புள்ளிகள் பட்டியலில் திண்டுக்கல் டிராகன்ஸ் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றிபெற்று 3வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐடீரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது.