Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WTC 2025-27 Points Table: முன்னேற்றம் கண்ட இந்திய அணி.. தோல்வியால் இங்கிலாந்து சரிவு! லேட்டஸ்ட் WTC புள்ளிகள் பட்டியல்..!

England vs India Test Series 2025: இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் விளைவாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இந்தியா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு மண்ணில் மிகப்பெரிய வெற்றியாக இது பதிவாகியுள்ளது.

WTC 2025-27 Points Table: முன்னேற்றம் கண்ட இந்திய அணி.. தோல்வியால் இங்கிலாந்து சரிவு! லேட்டஸ்ட் WTC புள்ளிகள் பட்டியல்..!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: AP
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Jul 2025 16:48 PM

இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (India vs England Test Series 2025) விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்தி, எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இந்திய கிரிக்கெட் அணி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில், இந்திய அணியின் (Indian Cricket Team) வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்தநிலையில், பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் என்ன மாற்றங்கள் நடந்துள்ளன..? இந்தியாவின் நிலை என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சமீபத்திய புள்ளிகள் அட்டவணை

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் முதல் 2 இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலிய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளில் 2 வெற்றி பெற்று 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், இலங்கை அணி 1 போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை தற்போது புள்ளிகள் அட்டவணையில் 16 புள்ளிகளை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி 4வது இடத்திற்கு வந்துள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1 போட்டியில் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இங்கிலாந்து முதல் 2 இடங்களில் இருந்தது. ஆனால் இப்போது தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணி 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. இங்கிலாந்தும் 2 டெஸ்ட் போட்டிகளில் 1ல் வெற்றியை பெற்று 1ல் தோல்வியடைந்துள்ளது. இந்தியாவும் இங்கிலாந்தும் தற்போது தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளன.

புள்ளிகள் அட்டவணை:

இந்திய அணி 4வது இடத்தில் உள்ள நிலையில் வங்கதேச அணி 5வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணியானது இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட்களில் 1ல் தோல்வியடைந்த நிலையில், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. இதனால், வங்கதேச அணி தற்போது 4 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால், தற்போது 6வது இடத்தில் உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் நடந்தது என்ன..?

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில், முதலில் இந்திய அணி டாஸ் இழந்து பேட்டிங்கில் களமிறங்கியது. கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் குவிக்க, இதன் அடிப்படையில் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. இதன் பிறகு, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜின் பந்துவீச்சின் மாயாஜாலம் இங்கிலாந்து அணிக்கு பெரும் அடியை தந்தது. முதல் இன்னிங்ஸில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த, இங்கிலாந்து 407 ரன்களுக்குள் சுருண்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 527 ரன்களில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்துக்கு 608 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் முடிவில், இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மழை காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. மீண்டும் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் அசத்தினார். 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் 10 விக்கெட்டுகளை ஒட்டுமொத்தமாக எடுத்தார். இதனால், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் 271 ரன்களுக்குள் சுருண்டது. அதன்படி, இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.