தியாகத்தின் திருநாள் பக்ரீத்: ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
Islamic Festival: பக்ரீத் அல்லது ஈதுல் அத்ஹா என்பது தியாகம் மற்றும் இறைநம்பிக்கையை நினைவூட்டும் முக்கிய இஸ்லாமிய பண்டிகையாகும். இப்ராஹிம் நபியின் இறை கட்டுப்பாடு மற்றும் தியாக மனப்பான்மையை போற்றும் நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு, குர்பானி செய்து இறைச்சி ஏழைகளுடன் பகிரப்படும்.
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படுவது பக்ரீத் அல்லது ஈதுல் அத்ஹா ஆகும். இந்தப் பண்டிகை தியாகத்தின் பெருமையை எடுத்துரைக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக கீழ்ப்படிதல் மற்றும் நம்பிக்கையின் உச்சத்தை வெளிப்படுத்தும் நிகழ்வை நினைவுகூரும் வகையில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் இந்த நாளை ஆன்மிக உணர்வுடனும், சமூக ஒற்றுமையுடனும் சிறப்பாக அனுசரித்து வருகின்றனர்.
இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு
பக்ரீத் பண்டிகையின் பின்னணியில் ஆழமான வரலாறு உள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையின்படி, அல்லாஹ் தனது தூதரான இப்ராஹிம் நபியை சோதிக்க அவரது மகன் இஸ்மாயீலை தியாகம் செய்யுமாறு கனவில் அறிவுறுத்தினார் என கூறப்படுகிறது. இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தனது மகனை தியாகம் செய்யத் தயாரான இப்ராஹிம் நபியின் நம்பிக்கையையும் பக்தியையும் கண்டு, இறைவன் இறுதியில் ஒரு ஆட்டை பலியிடுமாறு அருள்புரிந்ததாக நம்பப்படுகிறது. இந்த தியாக உணர்வையும் இறைநம்பிக்கையையும் நினைவுகூரும் விதமாகவே பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு தொழுகை மற்றும் வழிபாட்டு முறைகள்
பக்ரீத் நாளில் முஸ்லிம்கள் அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் பங்கேற்பார்கள். இந்த தொழுகை சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது. தொழுகைக்குப் பிறகு ஒருவர் மற்றவரை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். “ஈத் முபாரக்” என வாழ்த்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது இந்த நாளின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
குர்பானி கொடுக்கும் மரபு
பக்ரீத் பண்டிகையின் முக்கிய அம்சங்களில் ஒன்று ‘குர்பானி’ எனப்படும் பலியிடும் மரபாகும். பொருளாதார வசதி உள்ளவர்கள் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிட்டு அதன் இறைச்சியை மூன்று பாகங்களாகப் பிரிப்பது வழக்கம். ஒரு பகுதி குடும்பத்திற்கும், மற்றொரு பகுதி உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதி ஏழை எளிய மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பகிர்வு, கருணை மற்றும் உதவி மனப்பான்மை வலியுறுத்தப்படுகிறது.
Also Read: ஏகாதசி விரதம் இருந்தால் என்ன பலன்? கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்!
ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை உணர்த்தும் நாள்
பக்ரீத் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; அது மனிதர்களுக்கு தியாகம், பகிர்வு, இறைநம்பிக்கை மற்றும் மனிதநேயத்தை கற்றுத் தரும் ஒரு ஆன்மிக நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்கும் பண்டிகை மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும் இந்த நாள், சமுதாயத்தில் ஒற்றுமையையும் அன்பையும் பரப்புகிறது. குடும்ப உறவுகள் வலுப்பெறவும், சமூக நல்லிணக்கம் வளரவும் பக்ரீத் பண்டிகை முக்கிய பங்காற்றுகிறது.