Tiruchendur: நோட் பண்ணுங்க.. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!
Tiruchendur Murugan Temple Festival: முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் 2025, ஜூலை 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புரனமைப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேரம் குறிப்பதில் குழப்பம் நிலவி வந்தது. தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கி வரும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தினை கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்மிக அன்பர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை கோயில்கள் உள்ளது. இப்படியான நிலையில் இரண்டாம் படை வீடாக கடலுடன் கூடிய இடத்தில் காட்சிக்கொடுக்கிறார் திருச்செந்தூர் செந்திலாண்டவர். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இறை வழிபாடு மேற்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தி செல்கின்றனர். இப்படியான நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற பணிகள்
கடைசியாக 2009 ஆம் ஆண்டு ஜூலை 2ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனிடையே hcl நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி நிதி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 100 கோடி என மொத்தத்தில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜகோபுரம் திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. இதனை அடுத்து 9 நிலைகளைக் கொண்ட 137 அடி உயர ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்தது.
ராஜகோபுரத்தில் உள்ள கீழ்த்தள பகுதிகள் மற்றும் தூண்கள் புதுப்பிக்கும் பணிகள், ராஜகோபுரத்தில் இருக்கும் ஒன்பது கலசங்களை புதுப்பிப்பது, கோபுர கலசங்களில் வரகு தானியங்களை மாற்றுவது ஆகியவைக்காக ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டது. பழமை மாறாமல் ராஜ கோபுரத்தின் கும்ப கலசங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\




அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
இதற்கிடையில் கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் கும்பாபிஷேக பணிகளை இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கோயிலில் நடைபெறுகின்ற திருப்பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் முடி காணிக்கை மண்டபம், நாழிக்கிணறு செல்லும் பாதை, பக்தர்கள் தங்கும் இடங்கள், பக்தர்கள் இறைவழிபாடு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற க்யூ லைன், அந்த வரிசையில் தேவைப்படும் குடிநீர் மற்றும் கழிப்பட வசதிகள், விழா காலங்களில் வாகனங்களில் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் தகவல் வெளியானது.
தொடர்ந்து 2025, ஜூலை 7ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சுமார் 20000 வாகனங்கள் வந்தாலும் நிறுத்தக்கூடிய அளவுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்த உள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செய்த பாபு தெரிவித்தார். மட்டுமல்லாமல் கோயிலுக்கு வரும் பாதையில் உள்ள பழுதுகளை கும்பாபிஷேகத்திற்கு முன்பாக நீக்கி தருவதாக நெடுஞ்சாலை துறையினரும் தெரிவித்ததாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.