Ghee Lamp: நெய் தீப வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Spiritual Benefits: இந்து மதத்தில் நெய் தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியமான வழிபாட்டு முறையாகும். லட்சுமி, பார்வதி, சரஸ்வதி ஆகிய தேவியரின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி போன்ற பலன்கள் கிடைக்கும் என சாஸ்திரம் சொல்கிறது.

தீபமேற்றி வணங்குதல் என்பது இந்து மதத்தில் தவிர்க்க முடியாத கடவுள் வழிபாட்டில் இடம்பெறும் சடங்கு நடைமுறையாகும். சாஸ்திரத்தைப் பொறுத்தவரை நாம் எப்படி விளக்கேற்ற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் தீப வழிபாட்டில் நல்லெண்ணெய், விளக்கெண்ணய், எள் எண்ணெய், பசு நெய் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. தீபத்தில் பிறக்கும் ஒளி மூலம் நம் வாழ்க்கையில் இருக்கின்ற இருள் அகன்று நல்வழி பிறக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது. அதனால் தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் நம் வீட்டின் பூஜையறை மட்டுமல்லாமல் வாசல், பின்வாசல் என பல இடங்களிலும் தீபச்சுடரானது வைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் இத்தகைய தீப வழிபாட்டில் நாம் நெய் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பார்க்கலாம்.
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
தீப ஒளியில் லட்சுமி தேவியும் பார்வதி தேவியும் கலைமகளான சரஸ்வதி தேவியும் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த முத்தேவியரும் எழுந்தருளி நமக்கு அருளாசி வழங்குவதாக ஐதீகம் உள்ளது. இப்படியான நிலையில் வீட்டில் பிரம்ம முகூர்த்த வேலையில் விளக்கேற்றி வழிபடுவது பல பலன்களை கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் நெய் லட்சுமி தேவிக்கு உகந்ததாகும். இதனை ஏற்றி வழிபடும்போது நம் வாசல் தேடி லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்பது ஐதீகமாக உள்ளது.
அதேபோல் குலதெய்வம் நம் வீட்டிற்கு காவலாக வரவேண்டும் என்றால் சுத்தமான நெய்யில் விளக்கெண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனதில் ஏதேனும் குழப்பம் அல்லது வீட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கோயிலுக்கு சென்று ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். இது மனதில் உள்ள பாரத்தை குறைத்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.




பித்ரு – சர்ப்ப தோஷம் நீங்கும்
அதேசமயம் அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டில் பலரும் ஈடுபடுவார்கள். பித்ரு தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் அது அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் வெள்ளிக்கிழமை தோறும் ராகுகால நேரத்தில் இரண்டு சர்ப்பங்கள் இணைந்திருக்கும் நாகராஜ சிலைக்கு செவ்வரளி சாற்றி நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் தம்பதியினர் இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை பிறக்கும்.
அதேபோல் தொடர்ந்து 21 செவ்வாய்க்கிழமை அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்மை தாக்கும் எதிர்மறை சக்திகள் விலகும். மேலும் 48 நாட்கள் சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி 12 முறை சுற்றி வந்து வழிபட்டால் தொழிலில் சாதகமான வளர்ச்சி நமக்கு இருக்கும் என நம்பப்படுகிறது.
வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் தடைப்பட்டிருக்கும் தம்பதியினர் விரைவில் நல்ல செய்தி கேட்பார்கள் என நம்பப்படுகிறது.
எப்போதும் தீபம் ஏற்றும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மேற்கு திசை பார்த்தவாறு ஏற்றுவது நல்லது கிடையாது என கூறப்படுகிறது. ஒருவேளை உங்களால் தினமும் ஆலயத்திற்கு செல்ல முடியாது என்றாலும் வீட்டிலாவது நெய் தீபம் ஏற்றி வழிபட்டு அதற்குரிய பலன்களை பெறுங்கள் என கூறப்படுகிறது.
(ஆன்மிகம் மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையிலான தகவல்களை கொண்டு இக்கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)