பெற்றோரே கவனியுங்க.. தன்னம்பிக்கை மிக்க குழந்தை வேண்டுமா?
Child Confidence: குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் சுயநிறைவை வளர்க்க, வயதுக்கு ஏற்ற பொறுப்புகளை பெற்றோர் வழங்குவது அவசியம். சிறிய முயற்சிகளுக்குக் கூட பாராட்டு தெரிவித்து, தவறுகளை கற்றல் வாய்ப்பாக அணுகும்போது குழந்தைகளின் மன உறுதியும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். திறனை நம்பத் தொடங்குவதுடன், எந்தச் சூழலிலும் தைரியமாக செயல்படும் மனப்பக்குவத்தையும் பெறுவார்கள்.
குழந்தைகளின் எதிர்கால வெற்றிக்கு பாடப்புத்தக அறிவு மட்டுமல்ல, தன்னம்பிக்கையும் சுயமாக முடிவெடுக்கும் திறனும் மிக முக்கியமானவை. இந்த இரண்டு குணங்களும் ஒரே நாளில் உருவாகாது. பெற்றோர் தினசரி வீட்டில் கடைப்பிடிக்கும் சிறிய பழக்கங்கள், குழந்தையின் மனநிலையிலும் நடத்தையிலும் நீண்டகால நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைக்கு எப்போதும் அனைத்தையும் செய்து கொடுப்பதை விட, அவர்களால் செய்யக்கூடிய சிறிய பொறுப்புகளை வழங்குவது வளர்ச்சிக்கான முதல் படியாக அமையும். இதனால் அவர்கள் தங்களின் திறனை நம்பத் தொடங்குவதுடன், எந்தச் சூழலிலும் தைரியமாக செயல்படும் மனப்பக்குவத்தையும் பெறுவார்கள்.
சுயமாக செயல்பட வாய்ப்பு அளிப்பது அவசியம்
வயதுக்கு ஏற்ற சிறிய வேலைகளை குழந்தைகளே செய்து முடிக்க பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். பள்ளிப் பையை ஒழுங்குபடுத்துவது, பயன்படுத்திய பொருட்களை சரியான இடத்தில் வைப்பது, தங்களது உடைகளைத் தேர்வு செய்வது போன்ற எளிய செயல்கள் கூட பொறுப்புணர்வை வளர்க்கும். ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தாலும் உடனே கண்டிப்பதை விட, அதை அனுபவமாக எடுத்துக்கொள்ள அனுமதிப்பதே நல்ல அணுகுமுறை. இப்படியான சுதந்திரம் குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு, தங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்கும் பழக்கத்தையும் உருவாக்கும்.
பாராட்டும் வார்த்தைகள் மன உறுதியை உயர்த்தும்
குழந்தைகள் செய்த ஒவ்வொரு சிறிய முயற்சியையும் கவனித்து பாராட்டுவது மிகவும் முக்கியம். வெற்றி பெற்றதற்காக மட்டுமல்லாமல், முயற்சி எடுத்ததற்கும் பாராட்டு வழங்கும்போது அவர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். பிற குழந்தைகளுடன் ஒப்பிடாமல், அவர்களின் தனித்திறமையை மதித்து பேசுவது தன்னம்பிக்கையை வலுப்படுத்தும். பெற்றோரின் நேர்மறையான வார்த்தைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வையும், தங்களின் மதிப்பை உணரும் மனநிலையையும் வழங்கும்.
உரையாடல் மற்றும் முடிவெடுக்கும் பழக்கத்தை வளர்க்குங்கள்
குடும்பத்தில் நடக்கும் சிறிய முடிவுகளிலும் குழந்தைகளின் கருத்தைக் கேட்பது நல்ல பழக்கமாகும். இன்று என்ன விளையாடலாம், எந்த புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது வார இறுதியில் என்ன செய்யலாம் போன்ற விஷயங்களில் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்படலாம். இதனால் தங்களது கருத்துக்கும் மதிப்பு இருக்கிறது என்ற உணர்வு குழந்தைகளிடம் உருவாகும். அதே நேரத்தில் பிறரின் கருத்துகளையும் மதிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் இயல்பாகக் கற்றுக்கொள்வார்கள்.
Also Read: சளி, காய்ச்சலுக்கு நண்டு ரசம் உண்மையிலேயே நல்லதா? உண்மை இதோ..!
தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள கற்றுத்தர வேண்டும்
குழந்தைகள் தவறு செய்தால் உடனடியாக கோபப்படுவது அல்லது கடுமையாக விமர்சிப்பது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கக்கூடும். அதற்கு பதிலாக என்ன தவறு நடந்தது, அதை அடுத்த முறை எப்படி சரிசெய்யலாம் என்பதை அமைதியாக விளக்குவது பயனுள்ளதாக இருக்கும். தவறு என்பது தோல்வி அல்ல, புதிய அனுபவம் என்ற எண்ணத்தை சிறு வயதிலேயே உருவாக்கினால் அவர்கள் சவால்களை அச்சமின்றி எதிர்கொள்ளத் தொடங்குவார்கள். இப்படியான அணுகுமுறை மன உறுதியையும் சுயநம்பிக்கையையும் தொடர்ந்து வளர்க்கும்.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.