விமான விபத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள்.. ரூ.6 கோடி நிவாரண உதவி செய்த UAE மருத்துவர்!
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷம்ஷீர் வயலில், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் 171 விபத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் குடும்பங்களுக்கு ₹6 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.டாக்டர் ஷம்ஷீர் இதுபோன்று உதவியை ஏற்கனவே நிறைய முறை செய்துள்ளார்.

ஏர் இந்தியா விபத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷம்ஷீர் வயாலில் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 2025, ஜூன் 12 ஆம் தேதி சென்ற விமானம், அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தைச் சந்தித்து வெடித்து சிதறியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். ஊழியர்கள், விமானிகள், பயணிகள் என 241 பேர் உடல் கருகி பலியாகினர். அதேசமயம் விபத்துக்குள்ளான விமானம் அங்கிருந்த பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியின் மேல் விழுந்தது. இதனால் விடுதி உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் சிலர் உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷம்ஷீர் வயலில், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் 171 விபத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் குடும்பங்களுக்கு ₹6 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த விபத்தில் ராஜஸ்தானின் பார்மரைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் சவுத்ரி, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த மானவ் பாது, மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த ஆர்யன் ராஜ்புத், குஜராத்தின் பாவ்நகரைச் சேர்ந்த ராகேஷ் தியோரா ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். அனைவரும் தங்கள் மருத்துவப் பயணத்தின் கனவுகளில் இருந்தபோது நடைபெற்ற இதுபோன்ற எதிர்பாராத சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.
விபத்து தொடர்பாக ஷம்ஷீர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு
View this post on Instagram
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம், மத்திய அரசு ஆகியவை நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் அபுதாபியிலிருந்து நிவாரணம் அறிவித்த புர்ஜீல் ஹோல்டிங்ஸின் நிறுவனர் மற்றும் தலைவரும், VPS ஹெல்த் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஷம்ஷீர், ஏர் இந்தியா விபத்து தொடர்பான செய்திகளை கண்டபோது மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். மங்களூரில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரியிலும் நான் படித்தபோது இதுபோன்ற விடுதிகளில் வசித்து வந்தவன் என்ற முறையில் அந்த மருத்துவ கல்லூரி மாணவர்களின் மரணம் என் மனதை தொட்டது.
நான் அந்த விடுதியின் காட்சிகளைப் பார்த்தேன். அது உண்மையிலேயே என்னை உலுக்கியது. அது ஒரு காலத்தில் நான் வீடு என நினைத்த இடத்தின் மீது ஒரு வணிக விமானம் மோதும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம்மில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அவர்களின் வாழ்க்கை முடிந்தது எனவும் கூறியுள்ளார். டாக்டர் ஷம்ஷீர் இறந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி, படுகாயமடைந்த ஐந்து மாணவர்களுக்கு தலா ₹20 லட்சம், அன்புக்குரியவர்களை இழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் ஆகியவை என ரூ.6 கோடி வழங்கியுள்ளார். பிஜே மருத்துவக் கல்லூரியில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சங்கத்துடன் ஒருங்கிணைந்து நிதி உதவி வழங்கப்படும் எனவும், தேவைப்படுபவர்களுக்கு விரைவாக ஆதரவு கிடைப்பதும் உறுதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
டாக்டர் ஷம்ஷீர் இதுபோன்று உதவியை ஏற்கனவே நிறைய முறை செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டு மங்களூர் விமான விபத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினார். அவரது மனிதாபிமான உதவிகள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள், பொது சுகாதார அவசரநிலைகள் மற்றும் இடம்பெயர்வு நெருக்கடிகள் போன்ற காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்துள்ளது.